லாரி மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி சாவு!
10 Dec,2023
உத்தரப்பிரதேசத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பரேலி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. லாரி மீது கார் மோதி இந்த விபத்து நடைபெற்றது. அப்போது காரை சிறிது தூரம் லாரி இழுத்துச் சென்றது. இதில் கார் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். அத்துடன் பற்றி எரிந்த காரில் இருந்த நெருப்பை அணைத்த போது, காருக்குள் 8 பேரின் உடல்களும் கருகி கிடந்தன.
இந்த விபத்து குறித்து பரேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் கருகி உயிரிழந்தவர்கள், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பஹாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
விபத்து குறித்து பரேலி எஸ்எஸ்பி குலே சுஷில் சந்திரபான் கூறுகையில், " காருக்குள் இருந்த 8 பயணிகளும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.