வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை உடனே ஸ்டார்ட் செய்து விடக்கூடாது என்பது போன்ற குறிப்புகள் தொழில்நுட்ப வல்லுனர்களால் தெரிவிக்கப்படுகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்துள்ள கனமழை சென்னை நகரை மூழ்கடித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மட்டுமல்லாது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் நீரில் மூழ்கி இருக்கின்றன. தண்ணீர் வடிந்துள்ள பகுதிகளில் நீரில் மூழ்கிய வாகனங்களை உடனே ஸ்டார்ட் செய்து விடக்கூடாது என்பது போன்ற குறிப்புககள் தொழில்நுட்ப வல்லுநர்களால் அளிக்கப் படுகின்றன.
கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மெக்கானிக் ஷெட்டுக்கு எடுத்துச்சென்று அவற்றை முதலில் உட்புகுந்துள்ள நீரை சுத்தம் செய்து மற்றும் இதர பாகங்களையும் சுத்தம் செய்த பிறகு வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
தேங்கி இருக்கும் நீரில் செல்வது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கார்களைப் பொறுத்தவரை ரெனால்ட் க்விட், மாருதி ஸ்விஃப்ட், வெர்னா, ஐ10 போன்ற வாகனங்களில் அரை அடி முதல் முக்கால் அடி ஆழம் வரை உள்ள தண்ணீரில் செல்லலாம். அதுவே, எஸ்யூவி-களான ஹுண்டாய் கிரெட்டா, டாடா நெக்சான், ஸ்கார்பியோ, பொலேரோ போன்ற பெரிய வாகனம் என்றால் அதிகபட்சம் ஒரு அடி ஆழம் வரை செல்லலாம்.
அப்படி செல்லும்போது மணிக்கு 10-20 கி.மீட்டருக்கு மிகாமல் செல்ல வேண்டும். தண்ணீரை குடைந்து கொண்டு வேகமாக செல்லக் கூடாது. அப்படி சென்றால், 'ஏர் ஃபில்டர்' வழியாக தண்ணீர் வாகன எஞ்சினுக்குள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆகவே வேகத்தை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
சக்கர உயரத்தில் பாதியளவு வரை மூழ்கி விடும் அளவுக்கான தண்ணீரில் சென்று வந்தபிறகு, பிரேக்குகளில் சேறு சகதிகள் சேர்ந்துவிடக்கூடும் என்பதால் முன், பின் என இரண்டு பக்கமும் பிரேக் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க வேண்டும்.
கனமழையில் தண்ணீர் நிரம்பி நிற்கும் சாலையில் சென்று வந்த பிறகு, அடுத்த நாளில் மீண்டும் வாகனத்தை எடுக்கும் முன்பாக கீழே குனிந்து பார்க்க வேண்டும். ஒருவேளை கூலன்ட் தண்ணீரோ, இன்ஜின் ஆயிலோ கசிந்திருந்தால் நிச்சயமாக அதைக் கவனிக்க வேண்டும். அதேபோல், பேனெட்டை திறந்து, எஞ்சின் ஆயில் அளவை சோதிக்க வேண்டும். அதோடு தண்ணீர் கலந்திருந்தால், எஞ்சின் ஆயிலின் நிறம் பால் போன்ற வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். அப்படி ஆகியிருந்தால், அதையும் கவனிக்க வேண்டும்.
மூன்றாவதாக, பிரேக்கில் அசாதாரணமான சத்தம் கேட்டாலும் வாகனத்தை பழுது பார்க்க கொண்டு செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து வாகனத்தை எடுக்கும்போது எந்த இடைஞ்சலும் இன்றி ஸ்டார்ட் ஆகிவிட்டால் எந்தப் பிரச்னையுமில்லை. அப்படியில்லாமல், இவற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் பழுது பார்த்தாக வேண்டும்.
இருசக்கர வாகனங்களை பொருத்தவரை மழை நேரங்களில் ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டர் வகை வாகனங்களை எடுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் சைலென்சர் நனையாத வகையில் செல்லும்போது வாகனத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது மூழ்கிவிட்டால், வண்டி எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறதோ அதே நிலையில் ஆக்சிலேட்டரை சீராக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இல்லையென்றால், சைலென்சர் வழியாக தண்ணீர் புகுந்து இன்ஜினுக்குள் சென்றுவிடும். எஞ்சினுக்குள் சென்றுவிட்டால், வாகனம் மொத்தமாக நின்றுவிடும். சராசரியாக ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலே சைலென்சருக்குள் போய்விடும். ஆகவே ஓட்டும்போதும் நிறுத்தி வைக்கும்போதும் தண்ணீரின் அளவு சைலென்சரை எட்டுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒருவேளை தண்ணீர் உள்ளே புகுந்து வாகனம் நின்றுவிட்டால், உடனே அதை ஸ்டார்ட் செய்யக் கூடாது. மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்று, சைலென்சர் போன்ற பாகங்களை கழட்டி காய வைக்க வேண்டும். தண்ணீர் உள்ளே சென்ற பிறகு ஸ்டார்ட் செய்துவிட்டால், ஆயிலோடு தண்ணீர் கலந்துவிடும். அது இன்ஜினில் இருக்கும் பிஸ்டன் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏர் ஃபில்டரில் காற்று புக முடியாமல் கார்பரேட்டர் அடைத்துவிடும். ஆகவே, வண்டி நின்றுவிட்டால், இயன்றவரை அதை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதே நல்லது.
தண்ணீரில் நீண்ட நாட்கள் நின்றாலும் இதைச் செய்தால் போதும். அதோடு, தண்ணீர் வடிந்த பிறகு சைலென்சர், ஏர் ஃபில்டருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி போயிருந்தால், அதைக் கழட்டி சுத்தம் செய்து பொருத்த வேண்டும். மற்றபடி எந்தப் பிரச்னையும் வராது.
வாகனம் மழையிலேயே நீண்ட நாள் நின்றாலும், தினமும் 30 நிமிடமாவது ஸ்டார்ட் செய்து நின்ற இடத்திலேயே ஓடவிடுவது நல்லது. அப்படிச் செய்தால், வண்டி பாகங்கள் சூடாகிக் கொள்ளும், பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்காது. இருப்பினும், தண்ணீர் வடிந்து வண்டியை எடுக்கும்போது ஒரு மெக்கானிக்கிடம் வண்டியை விட்டு ஒரு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.