துவாரகா பேசியதன் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் பழ.நெடுமாறன்!
28 Nov,2023
’’எல்டிடிஈ அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார். அவரது மகள் துவாரகா பேசியதன் பின்னணியில் நிச்சயம் பிரபாகரன் இருக்கிறார் என்பது தான் உண்மை’’ என உலக தமிழ் பேரவையின் நிறுவனத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரில் எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. எனினும், பிரபாகரன் மகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில், துவாரகா என்ற பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது ஏ.ஐ வீடியோவாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. வீடியோவின் உண்மைத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருக்கிறார் என காண்பிப்பதற்கான காணொலி ஒன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கைப் புலனாய்வு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
மாவீரர் தினத்தை முன்னிட்டு இந்த காணொலியை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக பிரபாகரனின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த காணொலியைப் பயன்படுத்தி நார்வேயில் உள்ள எல்டிடிஈ அமைப்பின் சர்வதேச வலையமைப்புக்கு நிதியைத் திரட்ட திட்டமிட்டிருப்பதாவும், இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
முன்னதாக, எல்டிடிஈ தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என போலியாக ஒருநபரை அடையாளம் காட்டி நிதி வசூல் நடைபெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், துவாராகா பேசுவதாக கூறி வெளியிடப்பட்ட வீடியோவிற்கு பிறகு உலக தமிழ் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’பிரபாகரன் மற்றும் அவரது குடும்பமே அழிந்து போய்விட்டது என்று எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வந்தது. இப்போது பிரபாகரனின் புதல்வி வந்து உலக மக்களிடையே பகிரங்கமாக பேசியுள்ளார். அதன் பொருள் என்ன? அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை" என்றார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும், அவர் திரும்பி வருவார் என்றும், அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்று மதிமுக தலைவர் வைகோ நேற்று முன்தினம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.