.
நாட்டின் பொருளாதர தலைநகரான மும்பை மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதன் பிறகான 15 ஆண்டுகள் கழிந்தும் கோர வடுக்களாக மிச்சமிருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாத அச்சம், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தோர், கற்ற பாடங்கள் என நவம்பர் 26 தினம், பல வகைகளிலும் இந்தியா நினைவுகூரும் தினமாக இருக்கிறது.
1993-ம் ஆண்டு மும்பை கண்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அப்பால் அந்த நகரம் எதிர்கொண்ட மோசமான தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் 2008, நவம்பர் 26 அன்று நிகழ்ந்தது. பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 10 பேர், கடல் மார்க்கமாக கராச்சியிலிருந்து நள்ளிரவில் மும்பையில் கரையேறினர்.
.
மும்பை மாநகரின் அடையாளங்களான தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், யூதர்களின் வழிபாட்டுத்தலம்,காமா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகுந்து கண்ணில் பட்ட அப்பாவி பொதுமக்கள் அனைவரையும் ஏகே 47 கொண்டு சுட்டுத் தள்ளினர். ஆர்டிஎக்ஸ் குண்டு வெடிப்புகளை அரங்கேற்றினர். சுமார் 60 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் 166 உயிர்கள் பலியாயின. சுமார் 300 பேர் காயமடைந்தனர்.
.
மும்பை மாநகரமும் காவல்துறையினரும் கிஞ்சித்தும் இப்படியான ஒரு தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. ஓரிரு நபர்கள் துப்பாக்கியுடன் புகுந்திருப்பதாக கருதி வெறும் லத்தியுடன் பாய்ந்து அவர்களை பிடிக்க முயன்றனர். டெல்லியிலிருந்து விரைந்து வந்த தேசிய பாதுகாப்புப் படையின் கமோண்டோ வீரர்கள், திரைப்படங்களில் கூட பார்த்திராத சாகசங்களை நிகழ்த்தி பயங்கரவாதிகளில் 9 பேரை கொன்றனர். பெரும் உயிரிழப்புகளை தடுத்தனர்.
மகாராஷ்டிர காவல்துறையின் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம், தானியங்கித் துப்பாக்கியுடன் முன்னேறிய அஜ்மல் கசாப் மீது வெறும் லத்தியுடன் பாய்ந்தார். 5 குண்டுகளை வாங்கிக்கொண்டு அவனை மடக்க முயன்றார். அவரது உயிர்த் தியாகத்தில் பிடிபட்ட கசாப், நீண்ட நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் தூக்கிலிடப்பட்டான். மும்பை தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவரான ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர்.
.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் லஷ்கர் இ தொய்பா நடத்திய தாக்குதலில், அமெரிக்கா உள்ளிட்ட 24 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். உளவுத்துறையினர் முன்னரே எச்சரித்து இருந்தும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்காதது, மும்பை போலீஸார் வசம் நவீன ஆயுதங்கள், ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு ஆகியவை இல்லாதது உள்ளிட்ட அபத்தங்கள் பின்னர் அம்பலமாயின. மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவ்ராஜ் பாட்டீல், மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேவ் ஆகியோர் தங்களது பதவியை துறந்தனர்.
அனைத்தும் சரி செய்யப்பட்டு மும்பை மாநகர் மீண்டும் எழுந்து நிற்கிறது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரை சிதைக்க முயன்ற பாகிஸ்தான், அதன் உளவு அமைப்புக்கு உரிய நிதி கூட ஒதுக்க முடியாது சரிந்து கிடக்கிறது.