பெண் நிருபரை சுட்டுக்கொன்ற 4 பேருக்கு ஆயுள்தண்டனை டெல்லி நீதிமன்றம்
25 Nov,2023
தொலைக்காட்சி செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு செப்.30-ம் தேதி டெல்லி தொலைக்காட்சி செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன் வேலை முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நெல்சன் மண்டேலா மார்க்கத்தில் உள்ள வசந்த் குஞ்ச் என்ற இடத்தில் சில மர்மநபர்களால் அவர் காரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார், அஜய் சேத்தி ஆகியோர் மார்ச் 2009-ம் ஆண்டு முதல் காவலில் வைக்கப்பட்டனர். கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை நடந்ததாக காவல் துறை தெரிவித்தது.
இக்கொலை வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கொலையாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இவ்வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (MCOCA) கீழ் அவர்களுக்கு தலா ரூ.25,000 மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளி அஜய் சேத்திக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இந்த குற்றமானது அரிதான அரிதான வழக்குகளின் பிரிவில் வராது என்று கூறிய நீதிமன்றம், மரண தண்டனைக்கான கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.