17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 55 வயது போலீஸ்.. தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்
21 Nov,2023
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த நெருப்பூர் மணியகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். 55 வயதான சகாதேவன் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் சகாதேவனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகியதாக கூறப்படுகிறது.
இதில் சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் தற்போது அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. திருமணம் செய்வதாக கூறிய சகாதேவன், அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்து சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதத்திடம், பாதிக்கப்பட்ட பெண் தனது தாயுடன் சென்று புகார் கொடுத்தார்.
திருமணம் செய்வதாககூறி கர்பமாக்கி ஏமாற்றியதாகவும், சகாதேவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் கொடுத்தார். மாவட்ட எஸ்.பி உத்தரவின் பெயரில் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதியப்பட்டதை அறிந்த சகாதேவன் தலைமறைவாக இருந்து வந்தார்.
தலைமறைவாக இருந்த அவர் ஞாயிறு அன்று பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மகளிர் போலீசார் சகாதேவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சகாதேவனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு 16 வயதில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. கணவனின் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு குறித்து புகார் தெரிவிக்க காவல் நிலையம் வந்த சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார் சகாதேவன்.
குழந்தை திருமணம் செய்ததாக பெண்ணின் கணவர் வீட்டார் மீது வழக்கும் பதிவு செய்துள்ளார். பின்னர் சிறுமியை தனியாக ஒரு வீட்டில் குடியமர்த்தி, 8 மாதங்கள் அவருடன் குடும்பம் நடத்தியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கு தொடர்பாக பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்ட சிறுமி, அங்கிருந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் இந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.
அதன்பிறகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவனின் லீலைகள் வெளியே தெரியவந்துள்ளன. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் தருமபுரி நகர காவல் நிலையத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்களை திருடி விற்றதில் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.