ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதியில் இருக்கும் இஸ்ரேலியக் குடியேற்றங்களைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
'கிழக்கு ஜெருசலேம், சிரியாவின் கோலன் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதியில் இஸ்ரேல் குடியேற்றங்கள்' என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானம் ஐ.நா.வின் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக 145 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. 18 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்த நாடுகள் கனடா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா கூட்டாட்சி நாடுகள், நவுரு மற்றும் அமெரிக்கா.
இதில், மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது. பங்களாதேஷ், பூடான், சீனா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, மாலத்தீவு, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் பிரிட்டன் ஆகியவை இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த பிற நாடுகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.வில் இஸ்ரேல் தொடர்பான இதுபோன்ற தீர்மானங்கள் வரும் என்றும், அவற்றிலும் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறியதாக அந்தச் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது ஏன்?
ORF சிந்தனைத் திணைக்களத்தின் உறுப்பினர் கபீர் தனேஜா, இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததில் ஆச்சரியமில்லை என்று எழுதியுள்ளார்.
தனேஜா, பாலத்தீனப் பிரச்னையில் இரு நாடு தீர்வை இந்தியா ஆதரிக்கிறது என்றும், தனது அரபு கூட்டாளிகளுடன் சுமூகமாக இருப்பது இந்தியாவின் கொள்கை என்றும் கூறியிருக்கிறார். மேலும் இந்தத் தீர்மானம் பயங்கரவாதப் பிரச்னையிலிருந்து வேறுபட்டது, என்றிருக்கிறார்.
கடந்த மாதம், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் போர்நிறுத்த முன்மொழிவு கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அந்த வாக்கெடுப்பில் இருந்து வெளியேறியது. அப்போது, இஸ்ரேல் மீது மோதி அரசின் மென்மைப் போக்காக இந்தியாவின் நிலைப்பாடு பார்க்கப்பட்டது.
தற்போது, இஸ்ரேலுக்கு எதிரான சமீபத்திய ஐ.நா. தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. அதேசமயம், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதும், ஹமாஸின் போர்க்குற்றங்கள் பற்றியும் எதுவும் தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும், இவ்வாறான சூழ்நிலையில், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் அனைத்து நாடுகளுக்கும் இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்திருந்தது.
எனினும், இந்தியா இஸ்ரேலின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்று, காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் தொடர்பாக ஐ.நா.வில் அவசர அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நடந்த போர்நிறுத்த முன்மொழிவில் இந்தியா வாக்களிக்கவில்லை.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு இஸ்ரேலுக்கு ஆதரவாகவே கருதப்பட்டது. அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலியப் பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் பற்றிய எந்தக் குறிப்பும் அந்தத் தீர்மானத்தில் இல்லை என்றும், இந்தியா பயங்கரவாதத்தைச் சகித்துக்கொள்ளாது என்றும் இந்தியா அப்போது கூறியது.
அக்டோபர் 26-ஆம் தேதி ஐ.நா.வில் வாக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து, பிரதமர் நரேந்திர மோதி அரபு மற்றும் வளைகுடா நாடுகளின் பல தலைவர்களுடன் பேசினார்.
இந்த உரையாடலில், பாலத்தீனர்களுக்கு ஆதரவாக நிற்குமாறு பிரதமர் மோதியிடம் அரபு நாட்டுத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மற்றும் எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சிசி ஆகியோர் அடங்குவர்.
திங்களன்று இந்திய-அமெரிக்க நட்புறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கான முன்னாள் இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா, “இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் தேசிய நலன் சார்ந்தது, யதார்த்தமானது. அரபு நாடுகளிலிருந்தும் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக வலுவான குரல் வரவில்லை. நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கு இந்தியாவின் நிலைப்பாடு ஒரு முக்கியமான குறிகாட்டி. ‘இரு நாடு’ தீர்வு என்ற கொள்கையில் நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம்,” என்றார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த டி.எஸ்.திருமூர்த்தி, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அக்டோபர் 31-ஆம் தேதியன்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில், ‘இஸ்ரேல்-பாலத்தீன நெருக்கடிக்கு இரு நாட்டுத் தீர்வை இந்தியா எப்போதும் விரும்புகிறது. இஸ்ரேலுக்குள் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை கொள்வது இயற்கையானது’, என்று எழுதியிருந்தார்.
டி.எஸ்.திருமூர்த்தியின் கருத்துப்படி, இஸ்ரேல்-பாலத்தீன நெருக்கடியில் மேற்குலக நாடுகள் பாசாங்குத்தனம் மற்றும் இரட்டை நிலைப்பாடுகளுக்காக விமர்சிக்கப்படலாம். ஆனால் அரபு நாடுகளும் இந்த விஷயத்தில் அப்பாவிகள் இல்லை, என்கிறார்.
“பாலத்தீனர்களை ஓரங்கட்டுவதற்கு அரபு நாடுகள் பொறுப்பல்லவா? இஸ்ரேலுடனான உறவைச் சீராக்கும் பந்தயத்தில் அரபு நாடுகள் பாலத்தீனர்களின் பிரச்னை பற்றி பேசும் போது, இஸ்ரேல் இப்போது பாலத்தீனத்தின் எந்தப் பகுதியையும் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் இதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறது,” என்று எழுதியிருந்தார் அவர்.
முந்தைய வாக்கெடுப்பிலிருந்து இந்தியா விலகியிருந்த போது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மேற்கு ஆசிய ஆய்வு மையத்தில் பேராசிரியராக இருந்த ஏ.கே. பாஷா, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியா காட்டிய நிலைப்பாடு மோதி அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என்கிறார். "யுக்ரேன்-ரஷ்யா போரில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையுடன் உலகளாவிய தெற்கின் குரலாக மாறுவதற்கான இந்தியாவின் ஒருங்கிணைந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர்.