விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்
09 Nov,2023
ஜெர்மனியில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் சக பெண் பயணியிடம் சில்மிஷம் செய்துகொண்டே இருந்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனி நாட்டின் பிராங்பெர்ட் நகரில் இருந்து பெங்களூருக்கு லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் பயணித்த பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 52 வயது முதியவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியைச் சேர்ந்த 32 வயதான பெண் நவம்பர் 6ஆம் தேதி பிராங்பெர்டில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்தார். விமானத்தில் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, சக பயணியான முதியவர் கைவரிசையைக் காட்டிவிட்டார் என்று பெங்களூரு போலீசார் தெரிவிக்கின்றனர்.
தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு அருகில் அமர்ந்திருந்த முதியவர் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. முதியவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து, தனக்கு வேறு இருக்கை ஒதுக்குமாறு கோரினார்.
பின்னர், விமானம் பெங்களூருவுக்கு வந்ததும், அந்த பெண் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் அந்த முதியவர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதியவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது.