மூளையில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை
29 Apr,2026
இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் நாளாந்தம் அலுவலகம்- பொழுதுபோக்கு- கல்விச் சாலை - என பல இடங்களுக்கு செல்வதற்கு துவி சக்கர வாகனத்தை தான் பெரும்பான்மையாக பாவிக்கிறார்கள்.
போக்குவரத்து நெரிசல் - தரமற்ற சாலை- வாகனங்களின் பெருக்கம்- என பல்வேறு காரணங்களால் துவிசக்கர வாகனத்தை வேகமாக அல்லது விரைவாக இயக்கும் போது எதிர்பாராமல் விபத்து நடைபெற்று தலைப்பகுதியில் காயம் ஏற்படுகிறது.
உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மூளை பகுதியில் ஏற்படும் காயங்களை மருத்துவ மொழியில் அக்சனல் இஞ்சூரி என குறிப்பிட்டு, அதற்குரிய நவீன சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருகிறார்கள்.
இத்தகைய விபத்தின் போது எம்முடைய தலைப்பகுதியில் பலத்த அடி அல்லது வீழ்வதால் மூளையின் இயல்பான சுழற்சியில் திடீரென்று தடை ஏற்பட்டு, கடுமையான மூளை காயும் ஏற்படுகிறது. அதிலும் இத்தகைய தருணத்தில் நரம்பு மண்டலத்தின் தகவல் தொடர்பு பாதையில் தடை -விரிசல்- கிழிசல் - ஆகியவை ஏற்பட்டு, பாதிப்பை அதிகப்படுத்துகிறது.
இதற்கு உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறாவிட்டால்... நோயாளி கோமா அல்லது நிரந்தரமான மூளை சேத பாதிப்பிற்குள்ளாகலாம்.
இத்தகைய விபத்தின் போது தலையில் அடிபட்டு வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை வைத்தியர்கள் உடனடியாக எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து மூளையில் கடும் அதிர்ச்சியால் கிழிந்த அல்லது அறுந்த நரம்பு நார்களை சீராக்குவதற்கான மருந்தியல் சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சைகளை நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் வழங்கி நிவாரணம் அளிப்பார்கள். இது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய நிலை என்பதால் வைத்தியர்கள் துல்லியமாக சிகிச்சை அளித்து முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.