இன்றைய சூழலில் எம்மில் பலரும் இதயம் சார்ந்த பாதிப்புகளை சந்திப்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முப்பது வயதிற்குள்ளாகவே முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
எம்மில் பலரும் இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றிருக்கவில்லை. இருப்பினும் இதயம் தொடர்பான பாதிப்பு அதாவது நடை பயிற்சி மேற்கொள்ளும் போது இதயத்தில் ஏதேனும் அசௌகரிய நிலை ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று இதய சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
அதே தருணத்தில் எம்மில் பலரும் இதயத்தின் பாதிப்புகளை தொடக்க நிலை அறிகுறியாக உணர்ந்தாலும் அது வாய்வு கோளாறு என இவர்களாகவே ஒரு காரணத்தை கற்பித்துக் கொண்டு, அதனை கடந்து சென்று விடுகிறார்கள். இது தவறு.
இதயத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பதை உணர்ந்தால் உடனடியாக அது இதய தசைகளிலோ அல்லது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களிலோ கொழுப்புகளாலான அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானித்து அதனை தொடக்க நிலையிலே உரிய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பொதுவாக இதயத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இ சி ஜி- எக்கோ கார்டியோகிராம் -குருதி பரிசோதனை- ட்ரெட் மில் பரிசோதனை - என்ற எளிய வடிவிலான முதற்கட்ட பரிசோதனையில் உங்களுடைய இதய தசை மற்றும் இதய ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை துல்லியமாக அவதானிக்க இயலும்.
இதனைத் தொடர்ந்து பாதிப்பின் தன்மையை மேலும் துல்லியமாக அவதானிக்க ஓஞ்சியோகிராம் எனும் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
சிலருக்கு இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளும் போது உள்ள மருத்துவ நடைமுறை காரணமாக தயக்கம் இருக்கும். இத்தகைய நோயாளிகளுக்காகவே தற்போது சிடி கொரோனரி ஓஞ்சியோகிராம் எனும் பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இத்தகைய பரிசோதனையின் மூலம் உங்களுடைய இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு பாதிப்பை துல்லியமாக அவதானிக்க இயலும்.
சிலருக்கு இத்தகைய பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க எம்ஆர்ஐ எனும் பரிசோதனையும் மேற்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
இதன் மூலம் இதய ரத்த நாளங்கள் மற்றும் இதய தசைகளின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடு குறித்து அவதானிக்க இயலும். தற்போது இத்தகைய நோயாளிகளுக்கு நியுக்ளியஸ் ஸ்கேன் என்ற அது நவீன பரிசோதனையும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே எழுபது சதவீத இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்பட்ட பிறகு.. இது தொடர்பான அறிகுறி வெளிப்படும். என்றாலும்.. இதய பாதிப்பு தொடர்பாக ஏதேனும் அறிகுறிகள் தொடக்க நிலையில் வெளிப்பட்டால், உடனடியாக எச்சரிக்கையை பெற்று.. மேலே விவரிக்கப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, சிகிச்சையையும்... சிகிச்சைக்குப் பின்னரான ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையையும் ... கடைப்பிடிக்க வேண்டும்.