எம்மில் சிலருக்கு நடை பயிற்சி மேற்கொள்ளும் போது தடுமாற்றம் ஏற்படக்கூடும். சிலரால் சிறிது தூரம் நடை பயிற்சி மேற்கொண்ட பிறகு பாதத்தில் வலி ஏற்படும். வேறு சிலருக்கு இயல்பாக சிறிது தூரம் நடந்தால் அவர்களுடைய பாதம் மற்றும் கணுக்கால் பகுதியில் வலி உண்டாகும்.
இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் பொடியாட்ரி என குறிப்பிட்டு, அதற்கு பிரத்யேக சிகிச்சைகள் வழங்கி நிவாரணம் தருகிறார்கள்.
கால் கட்டை விரல், கால் விரல்கள் , கணுக்கால், மூட்டு வலி, தட்டையான பாதம், கணுக்கால் மூட்டு, தசை நாண் அழற்சி, குதிகால் வலி, மென்மையான திசு வளர்ச்சி என பாத பகுதியில் வலியும், வீக்கமும் ஏற்பட்டு நாளாந்த வாழ்க்கை நடைமுறையை பாதிக்கும்.
சிலருக்கு கட்டுடுத்தாத சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாகவும் கணுக்கால் மற்றும் பாத பகுதியில் பாரிய அசௌகரிய உணர்வு ஏற்படும்.
இவர்களும் வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். உங்களுடைய பாதம் மற்றும் கணுக்கால் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் வைத்தியர்கள் துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வர்.
இந்த தருணத்தில் வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் கே லேசர் சிகிச்சை எனும் அதிநவீன தொழில்நுட்ப சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை தருகிறார்கள்.
இத்தகைய சிகிச்சையின் போது பாதம் மற்றும் கணுக்கால் பகுதியில் எந்த புள்ளியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாகவும், பாதிப்பின் தன்மை மற்றும் வீரியத்தை துல்லியமாகவும் அவதானித்து வலியற்ற சிகிச்சையை வழங்குகிறார்கள்.
இந்த சிகிச்சையின் போது உள்ளே செலுத்தப்படும் ஊடு கதிர்கள் திசுக்களில் ஆழமாக ஊடுருவி, செல்களின் செயல்பாட்டில் ஏற்பட்டிருக்கும் தடைகளையும் , இடையூறுகளையும் சீரமைக்கிறது. மேலும் பாதிப்பின் தன்மைக்கேற்ப வைத்திய நிபுணர்கள் ஊடு கதிரின் அலை நீளங்களை நிர்ணயிக்கிறார்கள்.
அதாவது பாதத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தில் அகச்சிவப்பு கதிர்களை செலுத்துகிறார்கள். இதன் காரணமாக திசுக்களில் ரத்த ஓட்டம் சீரமைக்கப்படுகிறது. மேலும் இத்தகைய சிகிச்சையால் எம்முடைய உடலில் இயற்கையாக அமையப்பெற்றிருக்கும் என்டோர்ஃபின் மற்றும் என்கெஃபாலின் போன்ற வலி நிவாரணிகளின் செயல்பாட்டை தூண்டுகிறது.
இதனால் முழுமையான நிவாரணம் கிடைக்கிறது. இத்தகைய சிகிச்சையை தற்போது 18 வயதிற்கு குறைவான பிள்ளைகளுக்கும் மேற்கொண்டு நிவாரணம் தருகிறார்கள்.