மாரடைப்பு பாதிப்பிற்கு நவீன சிகிச்சை
25 Jun,2024
இன்றைய சூழலில் இளம் தலைமுறையினருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்பு ஏற்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாரடைப்பு குறித்த அல்லது மாரடைப்பிற்கான நெஞ்சுவலி குறித்த முழுமையான விழிப்புணர்வை எம்முடைய மக்கள் பெறவில்லை என்றும், தற்போது மாரடைப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன கருவிகளும், சிகிச்சைகளும் அறிமுகமாகி இருக்கிறது என்றும், இதனூடாக மாரடைப்பு பாதிப்பை துல்லியமாக அவதானித்து உடனடியாகவும், தீவிரமாகவும் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற இயலும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போது இதய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை துல்லியமாக அவதானித்து பாதிப்பின் வீரியத்தையும், அடர்த்தியையும் கணினி உதவியுடன் கண்டறிய ஓ சி டி (ஒப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி ) எனும் நவீன சிகிச்சை முறை அறிமுகமாகி இருக்கிறது. இந்த கருவியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு இருப்பதால்... நோயாளிக்கு அவசர காலத்தில் எம்மாதிரியான சிகிச்சையை வழங்கிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
ஒஞ்சியோ பிளாஸ்டி எனும் சிகிச்சையை மேற்கொள்ளும்போது இரத்த குழாய்க்குள் செலுத்தப்படும் நுண்ணிய குழாயில் இந்த கருவியின் பிரத்யேக குழாயும் இணைக்கப்படுகிறது. இரத்த குழாய்க்குள் கதீட்டர் செலுத்தப்பட்டவுடன் இந்த பிரத்யேக குழாயின் முனையில் இருந்து அக சிவப்பு கதிர்கள் செலுத்தப்படும். இவை ரத்தக் குழாயில் முழுப் பகுதியையும் படம் பிடித்து வெளியில் பொருத்தப்பட்டிருக்கும் கணினியில் காண்பிக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த கணினியில் ரத்தக்குழாயில் அடைப்பு எவ்வளவு தூரம் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும், எத்தனை சதவீதம் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும், இரத்த குழாய்க்குள் கால்சிய படிவுகள் இருக்கிறதா? அல்லது வேறு வகையான கொழுப்பு படிவுகள் இருக்கிறதா? என்பதையும் கண்டறியலாம்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பலூன் வைத்து சிகிச்சையை மேற்கொண்டால் பலன் அளிக்குமா? என்பதையும், இரத்த குழாய்க்குள் பொருத்தப்பட வேண்டிய ஸ்டென்ட்டின் அளவையும் இந்த கருவியின் உதவியுடன் தீர்மானிக்கலாம். சத்திர சிகிச்சைக்குப் பிறகு சரியான முறையில் தான் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா? என்பதையும் இத்தகைய கருவி மூலம் துல்லியமாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சத்திர சிகிச்சையின் போது ஏதேனும் பாதிப்புகள் சிறிய அளவில் ஏற்பட்டிருந்தாலும் அதனையும் இந்த கருவி மூலம் துல்லியமாக கண்டறிந்து சீராக்க இயலும். இதன் மூலம் நோயாளிக்கு நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமான முறையில் சிகிச்சைக்குரிய பலன் கிடைக்கும்.
மேலும் எழுபது வயதை கடந்தவர்களுக்கு இதய ரத்த நாளங்களில் இயல்பாக படிந்திருக்கும் கால்சியம் படிவுகளை அகற்றி சீராக்குவதற்கும், வேறு சில சிக்கலான இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கும் இத்தகைய நவீன சிகிச்சை முறை பலன் அளிக்கிறது. மேலும் ஓபன் ஹார்ட் சர்ஜேரி செய்ய இயலாத நோயாளிகளுக்கு இத்தகைய நவீன சத்திர சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க இயலும்.