குழந்தைகளுக்கு ஏற்படும் கண்ணில் நீர் வடியும் பிரச்சனை
26 Apr,2024
இன்றைய சூழலில் வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளில் பலருக்கும் பிறந்து மூன்று மாதத்திற்குள் அவர்களின் கண்களிலிருந்து இயல்பான அளவை விட இயல்பான தருணங்களை விட கூடுதலாகவும், அகால வேளைகளிலும் கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருக்கும். இதற்கு மருத்துவ மொழியில் நீர் கசிகின்ற கண்கள் என குறிப்பிடுவர். இதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பச்சிளம் குழந்தைகளில் சிலருக்கும், வயதானவர்களுக்கும் கண்களிலிருந்து நீர் கசிந்து கொண்டே இருக்கும். இது கண்களின் உள்ளார்ந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகும். கண்களில் அயல் பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதனை அகற்றுவதற்காக கண்களே பிரத்யேக நீரை சுரந்து அதனை பாதுகாப்பாக வெளியேற்றும். இந்நிலையில் சிலருக்கு கண்களில் உற்பத்தியாகும் நீர் இயல்பான அளவைவிட கூடுதலாக உற்பத்தியாகும் போதுதோ அல்லது கண்களில் உருவாகும் நீர் முறையாக வடிகட்டாமல் வெளியேறும்போதோ கண்களில் நீர் வடிதல் ஏற்படுகிறது.
பச்சிளங் குழந்தைகளின் சிலருக்கு முதல் சில மாதங்கள் வரை கண்களில் உற்பத்தியாகும் நீர் அதற்குரிய பிரத்யேக குழாய்கள் மூலம் வெளியேறுவதற்கான பாதை திறக்கப்படாமலோ அல்லது செயல்படாமலோ இருக்கக்கூடும். இதன் காரணமாகவும் குழந்தைகளுக்கு கண்களில் நீர் வடிதல் பாதிப்பு ஏற்படும். அதேபோல் முதுமையடைந்தவர்களுக்கும் கண் இமைகளின் தோல் விலகி செல்வதால் கண்களில் நீர் வடிதல் ஏற்படக்கூடும்.
பொதுவாக ஒவ்வாமை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று, கண் இமை வீக்கம், கண்ணீரை வெளியேற்றும் குழாயில் ஏற்பட்டிருக்கும் தடை அல்லது அடைப்பு, சளி, விழித்திரையில் ஏற்படும் காயங்கள், விழித்திரை புண், வறண்ட கண்கள், கண்களில் அயல் பொருள் விழுவது, கண்ணிமையின் விளிம்பு பகுதியில் ஏற்படும் வலியுடனான கட்டி போன்ற பல்வேறு காரணங்களால் கண்களில் நீர் வடிதல் பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சிலருக்கு கண்கள் சிவந்திருத்தல், கண் எரிச்சல், கண் வலி, பார்வை திறன் குறைபாடு, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் கண்களில் நீர் கசிவு ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்புடைய குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கண் மருத்துவர் நிபுணர்கள் பிரத்யேக ஒளி பேனா மூலம் பரிசோதனையை மேற்கொள்வர் . இதனுடன் வழக்கமான கண் பரிசோதனை மற்றும் கண்களில் நீர் கசிவு ஏற்படுவதற்கான காரணத்தை பிரத்யேக பரிசோதனைகள் மூலம் துல்லியமாக அவதானிப்பர். ஏதேனும் பாக்டீரியா தொற்றுகள் தொற்றுகளால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு சொட்டு மருந்துகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். வெகு சிலருக்கு மட்டும் கண்ணீரை உற்பத்தி செய்யும் நரம்பு பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சீரமைக்க பிரத்யேக சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.