நுரையீரல் உயர் குருதி அழுத்தகுரிய நவீன சிகிச்சை
16 Apr,2024
எம்மில் பலரும் உயர் குருதி அழுத்த பாதிப்பு குறித்து அறிந்திருப்போம். அதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டிருப்போம். ஆனால் எம்முடைய நுரையீரல் பகுதியில் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் இதயத்தின் வலது பகுதி விரிவடைந்து இதய செயலிழப்பு ஏற்படக்கூடும். ரத்த உறைவு, சமசீரற்ற இதயத்துடிப்பு, நுரையீரலில் ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். பெண்மணிகளுக்கு நுரையீரல் பகுதியில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுடைய பிரசவம் சிக்கலானதாக மாறிவிடக் கூடிய அபாயமும் உண்டு. இதனால் நுரையீரலில் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும்.
நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பு என்பது நுரையீரலில் உள்ள ரத்த நாளங்கள் இயல்பான அளவை விட தடிமனாகி சுருங்கி விடுகின்றன. இதனால் அப்பகுதி வழியாக நடைபெறும் ரத்த ஓட்டம் தடை படுகிறது. இதன் காரணமாக நுரையீரல் வழியாக ரத்தத்தை பம்ப் செய்வதற்கு இதயம் வழக்கமான அளவை விட கூடுதலாக உழைக்க வேண்டும். இதனால் இதய தசை பலவீனமடைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு இவை மெதுவாகவும், சிலருக்கு வேகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.
உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது ஓய்வில் இருக்கும் போதோ திடீரென்று ஏற்படும் மூச்சு திணறல், ஒக்சிஜனின் அளவு இயல்பானதை விட குறைவாக இருப்பதால் தோலில் நிறமாற்றம், மார்பு பகுதியில் அழுத்தம் அல்லது வலி, மயக்கம், சமச்சீரற்ற இதயத்துடிப்பு, சோர்வு, கணுக்கால், கால், வயிறு ஆகிய பகுதிகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று வைத்தியரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன் போது குருதி பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே பரிசோதனை, எலக்ட்ரோ கார்டியோ கிராம் & எக்கோகார்டியோகிராம் பரிசோதனை, நுரையீரல் செயல்பாட்டு திறன் குறித்த பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை, தூக்கத்தின் தரம் குறித்த பிரத்யேக பரிசோதனை, நுரையீரல் திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். வெகு சிலருக்கு மரபணு சோதனையையும் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்க படலாம்.
பரிசோதனைகளின் முடிவில் உங்களுக்கு எம்மாதிரியான நுரையீரல் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை பொறுத்து சிகிச்சைகளை தீர்மானிப்பர். நவீன தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். சிலருக்கு ரத்த உறவை தடுப்பதற்கான மருந்தியல் சிகிச்சைகளையும், ரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளையும் வழங்கி நிவாரணம் தருவர். வேறு சிலருக்கு ஒக்சிஜன் தெரபியை வழங்கி நிவாரணம் வழங்குவர். வெகு சிலருக்கு மட்டுமே அப்பகுதியில் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை என்றால் இறுதியாக நுரையீரல் மற்றும் இதய மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.