அண்மையில் ஐம்பது வயதை கடந்த எம்முடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் மதிய வேளையில் பசியாறிக் கொண்டிருக்கும்போது திடீரென்று முகத்தில் மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது போல் வலி உண்டானதாக தெரிவித்தார்.
உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்த போது, அவர் 'ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா' எனும் முக நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என விவரித்தார்.
மேலும் இதற்கு தற்போது நவீன சிகிச்சைகளும் அறிமுகமாகி பலனளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ட்ரைஜெமினல் நியூரால்ஜியா என்பது எம்முடைய முகத்தின் ஒரு பகுதியிலோ அல்லது வெகு அரிதாக இரண்டு பகுதிகளிலும் மின் அதிர்வை போல் கடுமையான வலியை ஏற்படுத்தும் நரம்பியல் பாதிப்பாகும்.
முகத்திலிருந்து மூளைக்கு சமிங்ஞைகளை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவற்றுக்கு இடையே ஏற்படும் இடைவெளி அல்லது பாதிப்பின் காரணமாக இத்தகைய வலி உண்டாகிறது.
சிலருக்கு இது ஒரு நிமிடம் வரை கூட நீடிக்கும். வேறு சிலருக்கு நாட்பட்ட வலி பாதிப்பாக மாற்றமடையும். பொதுவாக இத்தகைய பாதிப்பு ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்படுகிறது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
தாடை பகுதிகளில் மின்னதிர்வை போல் வலி, முகத்தை தொடும் போது ஏற்படும் வலி, வாயை மெல்லுதல், பேசும் போதும்.. பல் துலக்கும் போதும்..
முகச்சவரம் செய்யும் போதும்.. திடீரென்று வலி உண்டாகும், பெரும்பாலும் வலி முதலில் ஒரு பக்கத்தில் ஏற்படக்கூடும். வெகு அரிதாக சிலருக்கு மட்டும் இரவில் உறங்கும் போதும் வலி உண்டாகும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்... உடனடியாக மருத்துவர் சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள் வலி எந்த வகையானது? எங்கு ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது? என்பதனை முதலில் உங்களிடம் கேட்பர். இதனை அடுத்து முகத்தில் உள்ள நரம்பியல் செயல்பாடுகளின் திறன் குறித்த பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.
பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். முதலில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் தருவர்.
இதனைத் தொடர்ந்து முகத்தில் உள்ள தசைகளின் தளர்வுக்கான சிகிச்சைகளையும், போடெக்ஸ் எனும் ஊசி மூலமாக வருந்தியல் சிகிச்சையும் மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர்.
பாதிப்பின் தன்மையின் வீரியத்தை பொறுத்து வெகு சிலருக்கு வேறு சில பரிசோதனைகளையும் மேற்கொண்ட பிறகு மைக்ரோவாஸ்குலர் டிகம்ப்ரஷன், மூளையில் பிரத்யேக கதிர்வீச்சு கத்தி மூலம் சத்திர சிகிச்சை, பலூன் கம்ப்ரஷன் போன்ற நுட்பமான சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.