நாற்பது வயதுக்குட்பட்ட பெண்மணிகளில் சிலருக்கும், ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சிலருக்கும் திடீரென்று பேசும் போதோ.. உணவை மெல்லும் போதோ அல்லது விழுங்கும்போதோ.. சுவாசிப்பதிலோ சிரமங்கள் உண்டாகலாம். அவ்வாறு ஏற்பட்டால் அவை மயஸ்தீனியா கிராவிஸ் எனப்படும் தன்னுடல் தாக்க நோய் பாதிப்பின் அறிகுறி என எடுத்துக்கொண்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எம்முடைய உடலில் தன்னிச்சையாக இயங்கும் உறுப்புகளுக்கு இடையேயான தசைகள் பலவீனமடைந்து சோர்வடையக்கூடும்.
இதனால் நரம்புகளுக்கும், தசைகளுக்கும் இடையே கடத்தப்பட வேண்டிய தொடர்பு பாதிக்கப்பட்டு, இத்தகைய கோளாறு உண்டாகிறது. மேலும் இத்தகைய பாதிப்பு கண் தசைகள், முகம் மற்றும் தொண்டையில் உள்ள தசைகள், கழுத்து தசைகள் ஆகியவற்றில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் சிலருக்கு தோள்பட்டை, கால் பகுதியில் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
முகம் மற்றும் தொண்டை பகுதியில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... பேசுவதில் சிரமம், உணவுகளை மெல்லுவதிலும், விழுங்குவதிலும் அசௌகரியம், முக பாவனைகளை வெளிப்படுத்துவதில் சிக்கல்... ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
கண் தசைகளில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... கண் இமைகளின் சுமை அதிகமாகி பாரமாக தோன்றும். மேலும் இது பார்வை தடுமாற்றத்தையும், இரட்டை தோற்றத்தையும் உண்டாக்கலாம்.
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
இதன் போது மருத்துவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்தின் வரலாறை தெரிந்து கொண்டு உங்களுடைய நரம்பு மண்டலத்தின் இயக்கத்திறன் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வர்.
இதனைத் தொடர்ந்து ஐஸ் பேக் சோதனையையும், ரத்த பரிசோதனையையும் மேற்கொள்வர். சிலருக்கு நரம்பு தூண்டல் பரிசோதனை, சிங்கிள் ஃபைபர் எலக்ட்ரோமயோகிராபி பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை, நுரையீரல் இயங்கும் திறன் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.
இதனைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சையும் வழங்குவர்.
வெகு சிலருக்கு இன்ட்ராவெனஸ் தெரபி எனும் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர். இவற்றில் எல்லாம் முழுமையான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு மட்டுமே வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டு Thymectomy எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.