முதல் கர்ப்பம் கருச்சிதைவாக அபார்ஷனில் முடிந்தது. அப்போது செய்த பரிசோதனைகளில் சிஎம்வி எனப்படும் சைட்டோ மெகலோ வைரஸ்( cyto Megalo virus) தொற்று உள்ளது என்று முடிவுகள் வந்திருந்தன.
இப்பொழுது மீண்டும் அந்த தொற்றினால் கரு பாதிக்கப்படுமோ ? என்ற ஒரு பயமும் பதட்டமும் அனுவிற்கு இருந்தது. முதல் குழந்தை கருச்சிதைவு ஆன பின் ஆறு மாதங்கள் வரை காத்திருக்கும் படி மருத்துவர் கூறியிருக்கிறார். ஆனால் நான்காவது மாதத்திலேயே அனு இரண்டாவது கர்ப்பம் தரித்து விட்டார். அது வேறு கூடுதல் பயத்தை உண்டாக்கி விட்டது. சி.எம்.வி பற்றி இந்த வாரம் நாம் தெரிந்து கொள்வோம்.
இது ஹெர்பீஸ் குடும்பத்தை சேர்ந்த ஒரு வைரஸ். பலருக்கும் இந்த வைரஸ் நம் உடலில் இருக்கிறது. ஆனால் எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மட்டுமே இது நோயை உண்டாக்கும் , குறிப்பாக மாற்று உறுப்பு சிகிச்சை செய்தவர்களுக்கு தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இது எவ்வாறு பரவுகிறது?
இது ஒருவரிடமிருந்து எச்சில், ரத்தம் ,சிறுநீர் போன்றவற்றால் பரவுகிறது. குறிப்பாக எச்சில் மூலம் அதிகமாக பரவுகிறது. குறிப்பாக சிறு குழந்தைகள் உள்ள இடங்கள் மற்றும் கூட்டமாக உள்ள இடங்களில் பரவும் வாய்ப்பு அதிகம்.
தாய்க்கு அறிகுறிகள் என்ன ஏற்படும்?
கடுமையான காய்ச்சல், உடல் வலி தொண்டை வலி மற்றும் நெறி கட்டுதல் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் தொற்று ஏற்பட்டால் அது குழந்தையை எப்படி பாதிக்கும்?
கர்ப்ப காலத்தில் இந்த தொற்று முதல் முறையாக ஏற்படும் போது தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட கரு குழந்தைக்கு மூளை பாதிப்பை பெருமளவு ஏற்படுத்துகிறது. சிறிய தலை, மூளை வளர்ச்சி குறைபாடு ,காது கேளாமை, எடை குறைவு ,மஞ்சள் காமாலை போன்ற பல பிரச்சனைகளுடன் குழந்தை பிறக்கலாம்.
எவ்வாறு கண்டுபிடிப்பது?
பொதுவான வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை மட்டும் வைத்து இந்த நோயை கண்டுபிடிக்க முடியாது. சிஎம்வீ வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் ஆன்ட்டி பாடி பரிசோதனை செய்யும்போது நோய் ஏற்பட்டிருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இந்த வைரஸ் தொற்று பாதித்தால் பெரும்பாலும் கருச்சிதைவு ஏற்படும் .
இதற்கான சிகிச்சை என்ன?
மருந்துகள் எதுவும் இதற்கு இல்லை. தேவைப்படுவதும் இல்லை . அதிகமான காய்ச்சல் உடல் வலி இருப்பின் அதற்குரிய மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படும். முதல் முறையாக தொற்று ஏற்படும் போது. அறிகுறிகளோடு நோய் பாதிப்பை ஏற்படுத்தலாம் . அடுத்தடுத்த தொற்றுகள் , அறிகுறிகள் எதையும் ஏற்படுத்தாது. மேலும் ஒருமுறை தொற்று ஏற்பட்டால் நம்முடைய உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த வைரஸ் நிரந்தரமாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
சிஎம்வீ க்கு ஏதேனும் தடுப்பூசிகள் உண்டா ?
இப்போது வரை தடுப்பூசிகள் எதுவும் இதற்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
யாருக்கு இந்த நோய் அதிகமாக தொற்றும்?
எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும் வரை இந்த வைரசால் தீவிரமாக தாக்க முடியாது. எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் குறிப்பாக கான்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து அதற்காக எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், மிகவும் வயதானவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே கடும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தும்.
பொதுவாக ரத்தத்தில் சி எம் வி வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்தால் குறைந்தது மூன்று மாதங்கள் வரை அவர்களை காத்திருக்க சொல்லுவோம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் மற்றும் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு பிறகு கருத்தரிப்பதற்கு திட்டமிட கூறுவோம்.
ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் பெரும்பாலும் கிருமித் தொற்று இனி புதியதாக வருவதற்கான வாய்ப்புகள் குறைவு . இப்பொழுது எடுக்கப்பட்ட மூன்றாவது மாத ஸ்கேனில் குழந்தை வளர்ச்சியும், இதயத் துடிப்பும் நன்றாக உள்ளது . எனவே கவலைப்பட தேவையில்லை என்று அனுவிற்கு ஆலோசனை கூறி அனுப்பி வைத்தேன்.