குழந்தையை பாதிக்கும் மூளைக் காயம்
26 Dec,2022
இன்றைய சூழலில் இளம் தம்பதிகளில் பலரும் தங்களுக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை கவனமாக பராமரித்து வளர்த்தாலும், எதிர்பாராத தருணங்களில் அந்தக் குழந்தை கீழே விழுந்து தலையில் அடிபடுகிறது. சிலருக்கு இதனால் எந்த ஒரு ஆபத்தும் நிகழவில்லை என்றாலும், குழந்தை கீழே விழுந்து தலையில் அடிபட்டால், அடிப்பட்ட தருணத்திலிருந்து மூன்று நாட்களுக்குள் அவர்களை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
ஏதேனும் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
பொதுவாக ஒரு வயது நிரம்பாத குழந்தைகள் எதிர்பாராத தருணங்களில் படுக்கை, தொட்டில் போன்றவைகளிலிருந்து கீழே விழுந்துவிடலாம். மூன்றடிக்கும் குறைவான உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும், அந்தக் குழந்தை எப்படி விழுந்தது என்பதனை அவதானிக்க வேண்டும். ஏனெனில், சில காயங்கள் தானாக சரியாகிவிடும். சில காயங்கள் நாளடைவில் பாரிய பாதிப்பை உண்டாக்கிவிடும். இதனால் மருத்துவர்கள் குழந்தை கீழே விழுந்தவுடன் சில அறிகுறிகளை அவதானிக்க வலியுறுத்துகிறார்கள்.
உங்கள் குழந்தை கீழே விழுந்த மூன்று தினங்களுக்குள் வழமையை விட கூடுதலான அழுகை, உண்ணும் முறை, உறங்கும் முறைகளில் மாற்றம், பிடித்த பொம்மைகள் மற்றும் செல்ஃபோன் மீது ஆர்வம் காட்டாதிருத்தல், வாந்தி அல்லது குமட்டல், வலிப்பின் தாக்கங்கள், தோற்றத்தில் மாற்றம் போன்றவை இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து, இது தொடர்பாக தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்து அவர்களிடம் ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
மருத்துவர்கள் இதனை கன்கஸன் எனும் மூளைக் காயம் என வகைப்படுத்தி, இதற்கு சிகிச்சையளிக்கிறார்கள்.
முதலில் மூளை பகுதியில் உள்ள நரம்பியல் மண்டலம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை அவதானிக்கிறார்கள்.
சில தருணங்களில் எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனையையும் மேற்கொள்ள பரிந்துரை செய்வதுண்டு.
இது போன்ற தருணங்களில் மூளைக்கு ஓய்வளித்து, மீண்டும் தன் இயல்பான நிலைக்கு மூளை திரும்புகிறதா என அவதானிப்பர். பிறகு அதற்கான சிகிச்சையை பரிந்துரைப்பர். அவர்களின் கவனம் குறித்தும் அவதானித்து, அதற்கேற்ப சில உளவியல் சிகிச்சைகளையும் இயன்முறை சிகிச்சைகளையும் பரிந்துரைக்கக்கூடும்.