விஜய் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு திடீர் ஒத்திவைப்பு!
01 Oct,2025
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் செய்தி! தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் மாநிலம் தழுவிய அரசியல் பயணத் திட்டங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன!
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த கோரமான கூட்ட நெரிசல் (Stampede), 41 அப்பாவி உயிர்களைப் பறித்த துயரச் சம்பவத்தின் நேரடி விளைவே இந்த அதிரடி முடிவு! எதிர்பாராத இந்தச் சோகத்தால், தவெக கட்சி ஆழ்ந்த துயரத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
பல உயிர்களைப் பலிகொண்ட இந்தக் கோர நிகழ்வு, தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய் எடுத்திருக்கும் இந்தத் தற்காலிகப் பிரேக், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் கனவில் இருந்த தவெக-வின் பயணத்திற்கு இந்தச் சோகம் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள விஜய்யின் அடுத்தக்கட்ட பிரச்சாரக் கூட்டங்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரூரில் ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம், இனிவரும் காலங்களில் விஜய்யின் அரசியல் திட்டங்களை எப்படி பாதிக்கும், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இந்த ஒத்திவைப்பு என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் தமிழக அரசியல் அரங்கில் இடிபோல் எதிரொலிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
“கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.