நடிகர் கார்த்திக் குமார் குறித்து பேச பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு
24 May,2024
நடிகர் கார்த்திக்குமார் குறித்து கருத்து தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கார்த்திக் குமார் - பாடகி சுசித்ரா தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர்கள் தனுஷ், ஷாருக்கான், நடிகை த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முக்கியமாக தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமாரை, ஓரினசேர்க்கையாளர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு வீடியோ மூலம் கார்த்திக்குமார் காட்டமாக பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், பாடகி சுசித்ராவின் பேட்டி, தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தன்னைப் பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி பாலாஜி முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகர் கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், கார்த்திக்குமாரின் மனுவுக்கு பதிலளிக்கும்படி சுசித்ராவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.