பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்தக்கண்ணன் புற்றுநோயால் இறந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 48.
சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் சன் மியூசிக், SS மியூசிக் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பார்வையாளர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தொலைக்காட்சி மட்டுமல்லாமல், 'சிந்துபாத்' சீரியல், 'சரோஜா', 'அதிசய உலகம்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
Bile Duct Cancer என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (ஆகஸ்ட் 16) இரவு காலமாகியிருக்கிறார். இந்த செய்தியை இயக்குநரும், அவரது நண்பருமான வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.
சிங்கப்பூரில் வசித்து வந்தவர் தனது மனைவி ராணியின் படிப்பிற்காக சென்னை வந்திருக்கிறார். அதன் பின்பே நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து இருக்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனை ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ஆனந்த கண்ணன்.
பின்பு, தொலைக்காட்சியில் இருந்து விலகி ஆர்ஜே, பகுதி நேர விஜேவாகவும் பணிபுரிந்தார். சிங்கப்பூரில் இருந்த போதே அங்கிருந்த பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். சன் டிவியில் பணிபுரிந்த காலத்தில் விஜய், சூர்யா, அசின் என பல முன்னணி நட்சத்திரங்களை பேட்டி எடுத்துள்ளார். இவரது கலகலப்பான பேச்சுக்கும், சிரித்த முகத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
பின்பு 2011ம் வருடத்திற்கு பிறகு மீண்டும் சிங்கப்பூரில் குடியேறிய அவர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு டிஸ்கவரி தமிழில் ஒளிபரப்பான 'சுவை' எனும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்தக்கண்ணனின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது. அவரது நண்பரும் நடிகையுமான காஜல் பசுபதி அவருடன் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியவர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இது சரியானதல்ல கண்ணா என ட்வீட் செய்திருக்கிறார்.
ஆனந்தக்கண்ணனுடனான நினைவுகளை பகிர்ந்து கொள்ள, பிபிசி தமிழுக்காக காஜலை தொடர்பு கொண்டோம்.
"இயக்குநர் வெங்கட்பிரபுவின் ட்வீட் பார்த்துதான் எனக்கே இது குறித்து தெரிய வந்தது. அதன் பின்பு எங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் இதை உறுதி செய்தபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின்பு ஆனந்தக்கண்ணனின் தொலைபேசிக்கு அழைத்தேன். அவரது குடும்பத்தாரையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன், முடியவில்லை. தொலைக்காட்சியில் வேலை செய்த காலத்தில் இருந்தெந் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். வேலை சார்ந்த விஷயம் என்பதையும் தாண்டி, நிறைய தனிப்பட்ட விஷயங்களும் பகிர்ந்து கொள்வோம். தொலைக்காட்சியை விட்டு விலகி, அவர் சிங்கப்பூரில் பிசினஸ் செய்து வந்தார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தெரிந்து எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார்.
அவர் பிரபலமாக இருந்த காலத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதே சமயத்தில் அவரது தோற்றம், உடை, பேச்சு இதெல்லாம் வைத்து அவர் திமிர் பிடித்தவர் என்றெல்லாம் பலர் நினைத்திருக்கின்றனர். அப்படி நிறைய கடிதங்களும் அவருக்கு வந்திருந்தது. ஆனால், நிஜமாலும் மேலே சொன்னதுக்கெல்லாம் நேர் எதிராக மிகவும் தன்மையானவர். அவர் இப்போது இல்லாமல் இருப்பது எதிர்பாராத ஒன்று. நல்ல செய்தியாக இருந்தால் நாலு பேரிடம் இது குறித்து பேசலாம். ஆனால், காலையில் இருந்து இது குறித்தான தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளால் நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன். இதுகுறித்து நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை" என்பதோடு முடித்து கொண்டார் காஜல் பசுபதி.
இவரது மரண செய்தி அறிந்து ரசிகர்கள் பலரும் அவரது சிரித்த முகத்தையும், அவரது ஆரம்ப கால தொலைக்காட்சி பயணத்தில் தங்களது நினைவுகளையும் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.