ஸ்ரீதேவி கணவர் போனி கபூரிடம் போலீசார் விசாரணை -மது போதையில் இருந்தபோது தொட்டியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம்
26 Feb,2018
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை இன்று பிற்பகல் வெளியானது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதை அடுத்து, அவரது உடல் எம்பால்மிங் செய்ய அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது உடல் இன்று எம்பால்மிங் செய்யப்படவில்லை. சட்ட ரீதியிலான சிக்கல்கள் தீராததால் எம்பால்மிங் செய்வதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதேவி உடல் இன்று மும்பை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணையை பதிவு செய்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துபாயில் உள்ள புர் துபாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனி கபூர் விசாரணைக்காக சென்றார். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு போனி கபூர் பதிலளித்ததை பதிவு செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்நிலையில், துபாயின் பிரபல ஊடகமான ‘கல்ஃப் நியூஸ்’ இணையதளம் மாறுபட்ட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.