AS ஆகி முதலமைச்சர் விஜய்யுடன் வேலை பார்க்கும் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்

 

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த், சமீபத்தில் நடைபெற்ற ‘ஸ்டுடியோ ஒன்’ விருது வழங்கும் விழாவின் மேடையில் தனது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐ.ஏ.எஸ் (IAS Srutanjay Narayanan) தற்போதைய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசில் மிக முக்கியப் பொறுப்பில் பணியாற்றி வருவதைக் குறிப்பிட்டு அழுது, நெகிழ்ந்து பேசியுள்ளார். சினிமா வாரிசுகள் அனைவரும் மீண்டும் திரைத்துறைக்கே வரும் வழக்கத்திற்கு மாறாக, தனது மகன் கடினமாக உழைத்து நாட்டின் உயரிய ஆட்சிப் பணிக்குச் சென்றது மட்டுமின்றி, தற்பொழுது முதலமைச்சருடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவது தனக்குப் பெருமிதம் அளிப்பதாக அவர் உருகியுள்ளார்.

விருது மேடையில் பேசிய சின்னி ஜெயந்த், “பல ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய் சாருடன் இணைந்து ‘மாண்புமிகு மாணவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். காலங்கள் உருண்டோடி இன்று அவரே தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருக்கிறார். அதைவிட எனக்குப் பெருமை என்னவென்றால், என்னுடைய மகன் ஸ்ருதன் ஜெய் UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, இன்று அதே விஜய் சாரின் அரசாங்கத்தில், அவருக்குக் கீழ் ஒரு முக்கிய அரசு அதிகாரியாகத் தமிழ்நாட்டு மக்களுக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்று நாத்தழுதழுக்கக் கூறினார்.

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளநிலைப் படிப்பையும், அசோகா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பையும் முடித்தவர் ஆவார். ஒரு மென்பொருள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், சினிமா வெளிச்சத்தின் பக்கம் ஒதுங்காமல், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் தன்னிச்சையாகப் படித்துத் தனது இரண்டாவது முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதனை படைத்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் துணை ஆட்சியராகவும், கூடுதல் ஆட்சியராகவும் திறம்படப் பணியாற்றிய அவர், தற்போதைய தவெக அரசின் கீழ் தலைமைச் செயலகப் பணிகளில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

சின்னி ஜெயந்தின் இந்த உணர்ச்சிப்பூர்வமான மேடைப் பேச்சு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “திரையில் கதாநாயகர்களுடன் காமெடியனாக வலம் வந்து எங்களை மகிழ்வித்த சின்னி ஜெயந்த், நிஜ வாழ்க்கையில் தனது மகனை ஒரு நிஜமான ஹீரோவாக, சமூகத்திற்குப் பயன்படும் மிக உயரிய அதிகாரியாக வளர்த்து சாதித்துக் காட்டியுள்ளார்” என்று ரசிகர்களும், நெட்டிசன்களும் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர். சினிமாவில் இருந்து வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் நிர்வாகக் கட்டமைப்பில், ஒரு பழைய சக நடிகரின் மகனே ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றுவது ஒரு அழகான திரைக் காவியம் போன்ற திருப்பம் என அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.அரசியல் செய்தி