மேலும் பல மர்ம மரணங்கள் நிகழும்! எச்சரித்துள்ள அநுர அரசு

 

இலங்கையில் எதிர்காலத்தில் முக்கிய சாட்சியங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும் இடம்பெறக்கூடும் என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் தற்போது நீதிமன்ற பிணையில் இருப்பதாகவும், இவ்வாறு உயிரை மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உயிரை மாய்க்கும் சம்பவங்கள்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த சில நாட்களில் பல உயிரை மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றன. அண்மையில் ஒரு நபர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், தான் கார்ல்டன் இல்லத்தில் வைத்து எவ்வளவு இலஞ்சம் கொடுத்தேன் என்பது குறித்து அந்த நபரே தனது கைப்பட கடிதங்களை எழுதியிருந்தார். ExecutiveBranch

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எவ்வளவு இலஞ்சம் கொடுத்தேன் என்பது குறித்தும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.

20 வருட சிறைத்தண்டனை
இறுதியில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். தற்போது ஒரு முன்னாள் பொலிஸ் மா அதிபரும் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

இன்னும் எத்தனை பேருக்கு இவ்வாறான நிலை ஏற்படும் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிணையில் வெளியே இருப்பவர்கள், அவர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் உள்ளன.

மகிந்தானந்த அளுத்கமகே ஒரு வழக்கிற்காக 20 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். முன்னாள் வர்த்தக அமைச்சர் 25 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

சரண குணவர்தன 16 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவை ஒரு சில வழக்குகளின் தீர்ப்புகள் மட்டுமே, அவர்களுக்கு எதிராக இன்னமும் பல வழக்குகள் வரிசையாக உள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.