சிறுநீர் குழாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நவீன சத்திர சிகிச்சை

 

எம்மில் சிலருக்கு சிறுநீரை கழிக்கும்போது, சிறுநீரில் குருதி கலந்து வெளியேறினால் அது கடுமையான நோய் பாதிப்பின் அறிகுறி என உடனடியாக அவதானித்து, அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று நிபுணர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

திடீரென்று எடை குறைவு, சோர்வு, முதுகு வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி, அசௌகரியம், சிறுநீரின் நிற மாற்றம், சிறுநீரில் குருதி கலந்து வெளியேறுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு சிறுநீரகம்- சிறுநீர் குழாய் -சிறுநீர் பை- சிறுநீர் வெளியேறும் பாதை- ஆகியவற்றில் தீங்கில்லாத அல்லது புற்றுநோயாக மாறக்கூடிய கட்டி பாதிப்பு ஆகியவை ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்

சிலருக்கு சிறுநீர் குழாய்களில் உள்ள செல்கள் விவரிக்க இயலாத காரணங்களால் திடீரென்று உற்பத்தியை அதிகரித்து, சிறுநீர் குழாயின் செயல்பாட்டில் தடையை உண்டாக்குகிறது.

இதனால் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரையிலான பகுதியில் அடைப்பு ஏற்பட்டு, அவை புற்றுநோயாக உருவாகிறது.

இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் அறுபது வயதை கடந்தவர்களுக்குத்தான் ஏற்படும் என்றும், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்

இதனை தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.