சீனாவில் மழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: 20 பேர் பலி, 331 பேர் காயம்

 

சீனாவில் கனமழை,வெள்ளம், நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 22 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன 4855 கட்டிடங்கள் சேதமடைந்தன. மழை, வெள்ளம் உள்ளிட்ட சம்பவங்களில் 11பேர் உயிரிழந்தனர்.

மேலும் 331 பேர்காயமடைந்தனர். 400க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் கன்சு மாகாணத்தில் உள்ள லாங்னான் நகரில் நான்ஹே டவுன்ஷிப்பகுதியில் நேற்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கு இருந்த சுமார் 33 பேர் மண், இடிபாடுகளில் புதைந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.

மீட்பு பணிகளின்போது 21பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாயமான 12 பேரை கண்டறிவதற்காக தீவிர தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.