திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள நிலத்தடிச் சிறையில் (17) கள ஆய்வு நடத்திய திருகோணமலை நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன், மேலதிக விசாரணைகளைத் தொடருமாறும், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையில் காணொளிக் காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பதினொரு இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் போகச் செய்வதற்கும், மேலும் பலரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்வதற்கும் ‘கன்சைட் ‘ (Gun site )என அறியப்படும் திருகோணமலை கடற்படைத் தளத்தைப் பயன்படுத்தியது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்பில், நீதிபதி இந்தக் கள ஆய்வை மேற்கொண்டார்.
பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன்படி இன்று (18) முதல் மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேலதிக விசாரணைகளில் திருகோணமலை குற்றப் புலனாய்வு பிரிவினர் (SOCO) பொலிஸார் இணைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.




