தருமபுரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது மூன்று குழந்தைகளும் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. iw
வீட்டிலிருந்து காணாமல் போன மனைவி
தருமபுரி அடுத்த தோக்கம்பட்டி அருகே உள்ள தடங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வரும் இவரது மனைவி அம்சா (35). இந்தத் தம்பதியருக்கு ஜீவிதா (16) மற்றும் நவீனா (6) என்ற இரு மகள்களும், குமரன் (3) என்ற மகனும் இருந்தனர்.
கடந்த 19-ஆம் தேதி மதியம் சுமார் 1 மணி அளவில், அம்சாவும் அவரது மூன்று குழந்தைகளும் திடீரென வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளனர். இதனால் பதறிப்போன குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளிலும் பல இடங்களிலும் அவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.
உடல்களில் கட்டப்பட்ட கயிறு..
இந்த நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் சரவணன் வீட்டின் அருகே, அதாவது அம்சாவின் தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நான்கு பேரின் உடல்களும் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இந்த இடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் அமைந்த பகுதி என்பதால், உடனடியாக அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான் கோட்டை காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இருந்து அம்சா மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் உடல்களையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள், பிரேதப் பரிசோதனைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் சடலமாக மீட்பு
மீட்கப்பட்ட நான்கு பேரின் உடல்களிலும் கயிறுகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தகவல், இந்தச் சம்பவத்தில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால், இது குடும்பத் தகராறு காரணமாக நடந்த தற்கொலையா, அல்லது யாரேனும் அவர்களைக் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்ற கோணத்தில் அதியமான் கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த அம்சாவின் கணவர் சரவணனிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் தாயும் மூன்று பிஞ்சு குழந்தைகளும் உயிரிழந்த இந்தச் சோகச் சம்பவம், அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஆறாத் துயரத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் வந்தால் உடனடியாக என்ன செய்யலாம்?
உங்களுக்கு நம்பிக்கை உள்ள குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நெருங்கிய ஒருவரிடம் உங்கள் மனநிலையைப் பற்றித் திறந்து பேசுங்கள்.
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் என்பவை மருத்துவ ரீதியாக சரிசெய்யக்கூடிய ஒரு மனநல சவாலே தவிர, உங்கள் பலவீனம் அல்ல. உடனடியாக ஒரு மனநல ஆலோசகரையோ (Counselor) அல்லது மருத்துவரையோ (Psychiatrist) சந்தியுங்கள்.
தயவுசெய்து தாமதிக்காமல் மேலே குறிப்பிட்டுள்ள சினேகா helpline (044-24640050) அல்லது Tele-MANAS (14416) எண்ணை உடனடியாக அழைத்து பேசுங்கள்.



