10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போர்க்கப்பலை உருவாக்கும் வடகொரியா

 

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், அந்நாட்டு கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போர்க்கப்பலை உருவாக்கவும், அதிநவீன இரகசிய நீருக்கடியிலான ஆயுதங்களை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த வாரம் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் வடகொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், கிம் ஜாங் உன் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னோட்டமாக, அண்மையில் கடலில் சோதனை செய்யப்பட்ட 5,000 டன் எடையுள்ள ‘காங் கோன்’ என்ற போர்க்கப்பலின் செயல்பாடுகளைத் தனது மகளுடன் நேரில் சென்று கிம் ஜாங் உன் பார்வையிட்டார்

கடந்த ஆண்டு இதே கப்பல் தொடக்க விழாவின் போது ஒரு பகுதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அது தற்போது சரிசெய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது நாட்டின் அணுஆயுத இருப்பை “அதிவேகமாக” அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கிம், அணுஆயுதத் தாக்குதல்களை முறியடிக்கக் கடற்படை பலத்தை உயர்த்துவது கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.

வடகொரியா 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போர்க்கப்பலை உருவாக்கத் திட்டமிடுவது குறித்துப் பேசுவது இதுவே முதல்முறை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யாவுடன் நெருங்கி வரும் வடகொரியாவைத் தங்கள் பக்கம் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் சீன ஜனாதிபதி ஜூன் 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் பியாங்யாங்கிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், சீன ஜனாதிபதியின் வருகைக்கு முன்பாகத் தனது நாட்டின் இராணுவ மற்றும் கடற்படைப் பலத்தைக் காண்பிக்கும் நோக்கில் கிம் ஜாங் உன் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.