வெனிசுவேலாவில் இடிபாடுகளுக்குள் பிறந்த குழந்தை 33 பேர் உயிருடன் மீட்பு!

 

கொடூர பூமியதிர்ச்சியால் நிலைகுலைந்துள்ள வெனிசுவேலாவில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் 72 மணி நேர அவசரக் கால அவகாசம் கடந்த நிலையிலும், சில அதிசயத்தக்க மீட்புச் சம்பவங்கள் மீட்புக் குழுவினருக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளன. கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் மட்டும் இடிபாடுகளுக்குள் இருந்து 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவற்றில், சர்வதேச மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தையும், இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

அமெரிக்க மீட்புக் குழுவினர் லா குவைரா மாநிலத்தின் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளுக்குள் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டிருந்த போது, மெல்லியதாகக் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அதிநவீன உபகரணங்கள் மூலம் கொட்டும் தூசிகளுக்கு இடையே பாறைகளை அகற்றி, போர்வை ஒன்றில் சுற்றப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை அவர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். ஹெல்மெட் அணிந்த அமெரிக்க மீட்பு வீரர்கள் அந்தக் குழந்தையைப் பத்திரமாகத் தூக்கி வரும் உணர்ச்சிகரமான வீடியோவை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் அதிநவீன ஸ்கேனர்கள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இரு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

கராகஸ் நகருக்கு அருகே இடிபாடுகளுக்குள் சுமார் 10 அடி (3 மீட்டர்) ஆழத்தில் சிக்கியிருந்த ‘மொய்ஸஸ்’ என்ற 11 வயது சிறுவனின் இருப்பிடத்தைக் கொலம்பிய மீட்புக் குழுவினர் ஸ்கேனர் மூலம் கண்டறிந்து நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் சிறுவன் ஸ்டிரெச்சரில் வைத்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளான்.

அவனது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததுடன், திடீர் சூரிய ஒளியால் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க துணியால் கண்கள் மூடப்பட்டிருந்தன. அச்சிறுவனின் தாயாரும் சகோதரியும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கரபல்லேடா நகரில் சரிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மெக்சிகோ நாட்டு மீட்புக் குழுவினர் மேற்கொண்ட ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் போது, மற்றொரு 11 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். சிறுவனை மீட்புப் படையினர் தூக்கி வரும் காட்சியைத் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“பூமியதிர்ச்சிநடந்து 72 மணி நேரத்தைக் கடந்துவிட்டதால் மனிதர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. ஆனால், இந்த வார இறுதியில் மீட்கப்பட்ட 33 பேரும், குறிப்பாக இந்தக் குழந்தைகளும் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்” என சுவிட்சர்லாந்து மீட்புக் குழுவின் தலைவர் செபாஸ்டியன் யூக்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை சுமார் 50,000 பேர் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சிகளின் தரவுப் பக்கங்கள் தெரிவிக்கும் நிலையில், எஞ்சியவர்களையும் மீட்கும் நோக்கில் சர்வதேசப் படைகள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடி வருகின்றன.