பெரு நாட்டின் மலைப் பாங்கான பிராந்தியத்தில் சனிக்கிழமை (18) இரவு ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சிகளால் குறைந்தபட்சம் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பெருவின் தலைநகரான லிமாவிற்கு கிழக்கே சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜுனின் பிராந்தியத்தில் உள்ள சுபாகா மாகாணத்தில் இந்த பூமியதிர்ச்சி மையம் கொண்டிருந்ததராக தெரிவிக்கப்படுகிறது.
பெருவின் தேசிய நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி, முதல் பூமியதிர்ச்சி 5.1 ரிச்டர் அளவாகவும் (24 கி.மீ ஆழம்), அதனைத் தொடர்ந்து 3.7 ரிச்டர் அளவில் இரண்டாவது பூமியதிர்ச்சியும் (18 கி.மீ ஆழம்) பதிவாகியுள்ளன.
அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் களிமண் மற்றும் வைக்கோல் கலந்த ‘அடோப்’ கற்களால் கட்டப்பட்ட எளிய கட்டமைப்புகள் என்பதால் பூமியதிர்ச்சியை தாங்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளன.
ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி சுமார் 48 வீடுகள் முற்றிலுமாக இடிந்து நாசமாகியுள்ளதுடன், 18 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மக்களுக்குத் தற்காலிகக் கூடாரங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரு நாடு புவியியல் ரீதியாகப் பசுபிக் ‘நெருப்பு வளைய’ப் பகுதியில் அமைந்துள்ளதால், உலகளவில் நடைபெறும் 85% நில அதிர்வுகளுக்கு உட்படும் அதிக ஆபத்துள்ள பிராந்தியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.



