ஐரோப்பிய நாடான பிரான்சின் தென்பகுதியில் உள்ள காடுகளில் வெடித்துள்ள பயங்கரக் காட்டுத்தீ காரணமாக, ஸ்பெயின் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள இரண்டு டசனுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் உள்ளிட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகளில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவிய வரலாறு காணாத வெப்ப அலைகளின் (Heatwaves) காரணமாக, காடுகள் வறண்டு போயிருந்த நிலையில் இந்த மாபெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பெர்பிக்னான் (Perpignan) நகருக்கு அருகே உள்ள ட்ரெவில்லாக் (Trevillach) என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய இந்தத் தீ, பலத்த காற்று மற்றும் கடுமையான வெப்பம் காரணமாகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து, தற்போது வரை 11,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைச் சாம்பலாக்கியுள்ளது. குடியிருப்புகளை நோக்கி வெறும் 300 மீட்டர் தூரம் வரை நெருப்பு சூழ்ந்ததால், நள்ளிரவு 1 மணி அளவில் அதிகாரிகள் வீடுகளின் கதவுகளைத் தட்டி மக்களைப் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்தத் தீயை அணைக்கும் பணியில் 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு வீரர் உட்பட 5 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.
இந்தக் கொடூரக் காட்டுத்தீயின் தாக்கம், உலகப் புகழ்பெற்ற ‘டூர் டி பிரான்ஸ்’ (Tour de France) சைக்கிள் பந்தயத்தையும் அசைத்துப் பார்த்துள்ளது. ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்குள் நுழையும் இந்த சைக்கிள் போட்டியின் மூன்றாவது கட்டப் பாதை, தீ விபத்து ஏற்பட்டுள்ள பைரனீஸ் (Pyrenees) மலைப்பகுதிக்கு மிக அருகில் உள்ளதால், அவசரக்கால மீட்பு வாகனங்கள் எளிதாகச் சென்று வர ஏதுவாக, பிரான்ஸ் எல்லைக்குள் ரசிகர்கள் யாரும் நேரில் வந்து போட்டியைப் பார்க்கக் கூடாது எனப் பிராந்திய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. மேலும், சுற்றியுள்ள பல நகராட்சிகளில் மின்சாரக் கட்டமைப்புகளும் சேதமடைந்து பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டிற்கு உதவ சைப்ரஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளிலிருந்து சிறப்புத் தீயணைப்பு விமானங்களை ஐரோப்பிய ஒன்றியம் (EU) அவசரமாக அனுப்பி வைத்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் (Climate Change) தீவிரக் காரணமாகவே இந்த ஆண்டு கோடைகாலக் காட்டுத்தீ சீசன் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்பெயினில் தற்போது 109 டிகிரி ஃபாரன்ஹீட் (42ஊC) வரை வெயில் பதிவாகி வரும் சூழலில், இந்த வாரம் முழுவதும் ஐரோப்பாவில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.



