நடத்தையில் சந்தேகம் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

 

மதுக்கரை : மதுக்கரை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் 2-வது மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மதுக்கரை அருகே மாம்பள்ளியை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகன் பிரசாத் (27).

முதல் மனைவியை பிரிந்து இருந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, திருமலையாம்பாளையம் பாண்டியன் வீதியில் வசிக்கும் மாகாளி என்பவரின் மகள் ராகினி (24) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ராகினியின் நடத்தையில் சந்தேகப்பட்ட பிரசாந்த், அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல, கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த பிரசாந்த், அரிவாளை எடுத்து ராகினியை தலை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த ராகினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கே.ஜி.சாவடி போலீசார், பிரசாந்த்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.