தென்னிந்திய தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் டெல்லி உயர்நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
தனியார் இசை நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இளையராஜா தரப்பால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தொடர்பாக நீண்டகாலமாக சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் தனியார் இசை நிறுவனம் ஒன்றுடன் தொடர்பான பாடல்களின் உரிமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் ஆரம்பகாலத் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கற்களாக அமைந்த 134 படங்களின் பாடல்கள் இந்த வழக்கின் கீழ் வருகின்றன.
இந்த 134 படங்களின் பாடல்களுக்கான உரிமை நிறுவனத்திற்கே சாதகமாக இருப்பதாக ஏற்கனவே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பாடல்களுக்குத் தனக்கே உரிமை உண்டு எனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பால் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இளையராஜாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
மேலும் அந்த குறிப்பிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திற்கு சாதகமான முந்தைய உத்தரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



