இந்தியாவில் வழக்கமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நாடு முழுவதும் பரவத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாகப் பருவமழை மிகக் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 42 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்ட மிக வறண்ட ஜூன் மாதங்களின் பட்டியலில் இந்த ஆண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இந்தியாவின் சராசரி இயல்பான மழைப்பொழிவு 157.7 மி. மீ ஆக இருக்க வேண்டும். ஆனால், இந்த மாதத்தின் இறுதி நாட்கள் வரை நாடு முழுவதும் வெறும் 92.2 மி. மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மாதத்தின் இறுதி நாளில் ஓரளவு நல்ல மழை பெய்தாலும் கூட, ஒட்டுமொத்த ஜூன் மாத மழைப்பொழிவு 100 மி. மீ-ஐத் தாண்டுவது கடினம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு நூற்றாண்டில் (1927 முதல் 2026 வரை) இதைவிடக் குறைவான மழைப்பொழிவு இரண்டு முறை மட்டுமே பதிவாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 87.5 மி. மீ மழையும், 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 92.1 மி. மீ மழையும் பதிவாகியிருந்தன. அவற்றுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் மிக மோசமான வறட்சியைச் சந்தித்துள்ளது.
வட்டார வாரியான மழைப் பற்றாக்குறை
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுமே இந்த மழைப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஏதேனும் ஒரு சில பகுதிகளில் மழை குறைந்தாலும் மற்ற பகுதிகளில் ஈடுசெய்யப்படும். ஆனால் இந்த முறை நாட்டின் நான்கு முக்கிய மண்டலங்களிலும் ஒரே நேரத்தில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மிகவும் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய இந்தியா: மிக அதிகபட்சமாக 54 சதவீத மழைப் பற்றாக்குறையைச் சந்தித்து, வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா: இங்கும் வழக்கத்தை விட 41 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது.
வடமேற்கு இந்தியா: இப்பகுதியில் 30 சதவீத மழைப் பற்றாக்குறை நிலவுகிறது.
தென்னிந்தியா: தென் மாநிலங்களில் 28 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
பின்னடைவுக்குக் காரணமான ‘எல் நினோ’ (El Niண்o)
நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் இந்தத் தீவிர மழைப் பற்றாக்குறைக்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ விளைவே முதன்மைக் காரணம் என்று வானிலை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடையும் ஒரு உலகளாவிய வானிலை நிகழ்வாகும்.
அமெரிக்காவின் காலநிலை மற்றும் சமூகத்திற்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IRI) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் நிலவும் அதிவேக வெப்பமயமாதல் காரணமாக எல் நினோ தற்போது மிதமான தீவிரத்தை எட்டியுள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எல் நினோ வலுவடையும் போது, அது உலகளாவிய காற்று சுழற்சியை மாற்றி அமைப்பதுடன், இந்தியக் கோடைகாலப் பருவமழையைப் பெருமளவில் பலவீனப்படுத்துகிறது.
பருவமழை தாமதமும் தற்போதைய நிலையும்
இந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் பலவீனமான தொடக்கத்தைக் கொண்டிருந்தது. அதன் பிறகு, அது எதிர்பார்த்த வேகத்தில் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முன்னேறவில்லை. ஜூன் மாதம் முழுவதும், ஒட்டுமொத்த நாட்டின் தினசரி மழைப்பொழிவு ஒரே ஒரு நாள் மட்டுமே அதன் இயல்பு அளவைத் தாண்டியது என்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
ஜூலை மாதத்தில் எதிர்பார்ப்பு
தற்போது நிலவும் கவலைகளுக்கு மத்தியில் ஒரு சாதகமான செய்தி யையும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக கடுமையான வறட்சியைச் சந்தித்துள்ள மத்திய இந்தியப் பகுதிகளில், பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பரவலாகப் பெய்ய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது. ஜூலை மாத மழையானது விவசாயப் பணிகளுக்கும், நாட்டின் நீர்நிலைகள் நிரம்புவதற்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதால், ஒட்டுமொத்த தேசமும் ஜூலை மாத மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.



