பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 652 பேர் கைது

 

பொலிஸ் மாஅதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 652 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கியதாக வலய மட்டத்திலான பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய நேற்று புதன்கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 26,337 பேர் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 652 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 129 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 53 சாரதிகளும், ஆபத்தான முறையில் அலட்சியமாக வாகனம் செலுத்திய 129 சாரதிகளும் கைதுசெய்யபட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4249 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.