கடந்த கால ஆட்சிகளில் பொதுப்பணித்துறை (PWD) மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் பெறுவதற்காகப் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் (Contractors) தைரியமாகப் புகாரளிக்க முன்வரலாம் என்றும், அவர்கள் இழந்த லஞ்சப் பணத்தை மீட்டெடுக்கத் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக அறிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவரது இந்த அதிரடி அறிக்கை, கடந்த கால ஒப்பந்த முறைகேடுகளைக் குறிவைத்து விடுக்கப்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஜூலை 1, 2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கடந்த ஆட்சிக் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் திட்டமிட்ட விதிமீறல்களும், முறையான லஞ்சக் கட்டமைப்புகளும் (Fixed Bribe Structure) அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நபர்கள் டெண்டர் பெற்றுத் தருவதாகக் கூறி ஒப்பந்ததாரர்களிடம் பெருந்தொகையை வசூலித்துள்ளனர். ஆனால், பலருக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்குறுதி அளித்தபடி டெண்டர் ஒதுக்காமல் ஏமாற்றியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுப் பணத்தை இழந்த ஒப்பந்ததாரர்களிடம் இருந்து தற்பொழுது தங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித அச்சமும் இன்றி நேரடியாகத் தன்னிடம் அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் (DVAC) தகுந்த ஆதாரங்களுடன் புகாரளிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். புகார்தாரர்கள் தங்களது புகார்களை நேரிடையாகவோ அல்லது minister.pwd.hd.tn@gmail.com என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அனுப்பலாம் என்றும், புகாரளிப்பவர்களின் விபரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தவெக அரசு தற்பொழுது நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நிர்வாகத்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இனிவரும் காலங்களில் டெண்டர் ஒதுக்கீடுகளில் 25 சதவீத கமிஷன் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் முழு வெளிப்படைத்தன்மையுடன் இணையதளம் வழியாக ஒதுக்கப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.



