ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் உள்ள சஹாரா வறுபூமிப் பகுதியில், தாங்கள் பயணித்த லாரி திடீரெனப் பழுதடைந்து நின்றதால் நடுக்காட்டில் தவித்த 49 பேர் கடுமையான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தாகத்தினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான மாலியில் நடைபெற்ற ஒரு பாரம்பரிய மத விழாவில் கலந்துகொண்டுவிட்டு, தங்களது சொந்த ஊரான நைஜருக்கு லாரியில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நைஜர் நாட்டின் அகாடெஸ் பிராந்தியத்தில் உள்ள அசமக்கா (Assamaka) என்ற எல்லைப் பகுதிக்கு மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபரீதம் நடந்துள்ளது. கடுமையான வெயில் மற்றும் பாலைவனத்தின் கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில், லாரியின் என்ஜின் பழுதடைந்துள்ளது. ஓட்டுநர், அவரது உதவியாளர் மற்றும் பயணிகள் அனைவரும் இணைந்து பல நாட்கள் போராடியும் வாகனத்தை பழுதுபார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் தங்களிடம் இருந்த குடிநீர் இருப்பும் தீர்ந்துபோனதால், அவர்கள் சஹாராவின் சுடுமணலில் சிக்கிக்கொண்டனர்.
இந்தக் கொடூரச் சூழலில் இருந்து எப்படியாவது தப்பிக்க நினைத்த இருவர் மட்டும், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாலைவனத்தில் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே நடந்து சென்று ஒரு நீர்நிலையைக் கண்டறிந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அசமக்கா பகுதிக்குச் சென்று உள்ளூர் அதிகாரிகளிடம் லாரி பழுதடைந்து மக்கள் தவிப்பது குறித்துத் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் காலம் கடந்துவிட்டது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, நகராமல் நின்ற அந்த லாரியின் அடியிலும், அதனைச் சுற்றிலும் தாகத்தால் துடிதுடித்து உயிரிழந்த 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் உடமைகள் அனைத்தும் பாலைவன மணலில் சிதறிக்கிடந்த அந்தக் காட்சி பார்ப்போரைக் கண்ணீர் விடச் செய்தது. உயிரிழந்தவர்கள் அனைவரும் நைஜர் நாட்டின் குடிமக்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்கள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே கூட்டுப் கல்லறைகளில் (Mass Graves) அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அகாடெஸ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.




