“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” : ட்ரம்பின் ஆதிக்க முயற்சிக்கு எதிராக ஒன்றுதிரண்டு மக்கள்

 

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தங்களின் ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து மீது அதிக செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் செலுத்த முயற்சிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் தலைநகர் நூக்கில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் ஒன்றுதிரண்டு பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டென்மார்க் நாட்டின் கீழ் ஒரு தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் கிரீன்லாந்துக்கு, ட்ரம்பின் சிறப்புத் தூதரான ஜெஃப் லேண்ட்ரி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இப்போராட்டம் வெடித்துள்ளது.

“எங்கள் அரசாங்கம் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திடம் கிரீன்லாந்து ஒருபோதும் விற்பனைக்கு அல்ல என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது” என்று இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த 37 வயதான அக்கல் குலுக் ஃபோன்டைன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நகர மையத்தின் ஊடாக அணிவகுத்துச் சென்ற நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், “கிரீன்லாந்து, கிரீன்லாந்து மக்களுக்கே!” மற்றும் “அமெரிக்காவே வெளியேறு” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் புதிய அமெரிக்கத் தூதரகக் கட்டடத்தை நோக்கித் தங்களின் முதுகைக் காட்டியவாறு அமைதியாக நின்று தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ட்ரம்ப்பின் நிலைபாட்டினை நோக்கும் போது, தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆர்க்டிக் தீவினை கட்டுப்படுத்த ட்ரம்ப் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

அமெரிக்கா இதனைத் தன்வசப்படுத்தாவிட்டால், இத்தீவு சீனா அல்லது ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும் அபாயம் இருப்பதாக வொஷிங்டன் தரப்பு வாதிடுகிறது.

அமெரிக்காவின் இந்த நகர்வுகள் உள்ளூர் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், டென்மார்க்கிற்கான அமெரிக்க தூதர் கென்னத் தூதரகத் திறப்பு விழாவின்போது பேசுகையில், “அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு பலப் பிரயோகத்தையும் பயன்படுத்தாது; கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அதன் மக்களே தீர்மானிப்பார்கள்” எனத் தெரிவித்து நிலைமையைத் தணிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.