கமேனியின் இறுதி சடங்கில் பரபரப்பு; டிரம்புக்கு மரண தண்டனை வழங்க ஈரான் கவிஞர்

 

கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் 4 ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து ஈராக்கில் உள்ள புனித நகரங்களான கர்பலா, நஜாப் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. 9ம் தேதி அவரது மஷாத் நகரில் நல்லடக்கம் நடக்கிறது.

கமேனியின் இறுதி சடங்குகள் தெஹ்ரானில் நடந்து வரும் நிலையில் நடந்த இரண்டாவது நாள் சடங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசிய கவிஞர் ரசூலி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அவர் பேசுகையில்,‘‘ டிரம்பிற்கு இந்த உலகம் இனி உகந்த இடமாக இருக்காது; உலகின் மிகக் கேவலமான நபர் இன்னமும் ஏன் உயிருடன் இருக்கிறார்?. அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றார். அவர் பேசியது கூட்டத்தினரிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. டிரம்ப், இஸ்ரேல் பிரதமரை கொல்ல வேண்டும் என்ற பதாகைகளும் அங்கு காணப்பட்டன.

கமேனியின் இறுதி சடங்கில் கமேனியின் மகன்களான மசூத்,மேசம்,மொஸ்தபா, ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் காலிபாப் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கமேனியின் மகனும் தற்போதைய உச்ச தலைவருமான அயதுல்லா மொஜ்தபா கமேனி கலந்து கொள்ளவில்லை. மொஜ்தபா படுகொலை செய்யப்படுவார் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்திருந்ததால் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிபர் டிரம்ப் கூறுகையில், கமேனியின் இறுதிச் சடங்கின் போது, ​​ஒரேயொரு தாக்குதலில் அந்நாட்டில் எஞ்சியிருக்கும் தலைமையை ஒழித்துவிட முடியும். அவர்கள் அனைவரும் அங்கேதான் இருக்கிறார்கள். ஒரே அடியில் அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிட முடியும், ஆனால் அதைச் செய்யப் போவதில்லை. அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தை நடத்த நமக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அதை செய்ய மாட்டோம் என்றார்.