இமாச்சலப் பிரதேசத்தின் இயற்கை எழில் நிறைந்த சுற்றுலா பாதைகளில் முக்கிய இடம் வகிக்கும் காங்ரா பள்ளத்தாக்கு ரயில்வே, நீண்ட இடைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக காத்திருந்த உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
இமயமலைப் பகுதிகளின் அழகை ரசித்தபடி பயணிக்க உதவும் இந்த பாரம்பரிய டாய் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதால், அப்பகுதியில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் நகரத்தையும், இமாச்சலப் பிரதேசத்தின் ஜோகிந்தர்நகரையும் இணைக்கும் இந்த குறுகிய அகல ரயில் பாதை, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 4 ஆண்டுகளாக சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ரயில்கள் மீண்டும் இயக்கப்படத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த ரயில் பாதையின் சில பகுதிகள் சேதமடைந்தன. குறிப்பாக சக்கி ஆற்றின் மீது அமைந்திருந்த முக்கிய ரயில்வே பாலம் பாதிக்கப்பட்டதால், சேவையை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் பல கட்டங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது ரயில் போக்குவரத்து முழுமையாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் 164 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ரயில் பாதை, இமாச்சலப் பிரதேசத்தின் நீளமான டாய் ரயில் வழித்தடமாக அறியப்படுகிறது. காங்ரா, நூர்பூர், ஜ்வாலாமுகி, பாலம்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக செல்லும் இந்த சேவை, சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல், அன்றாட பயணிகளுக்கும் முக்கிய போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது.
இந்த ரயிலின் மற்றொரு சிறப்பு அதன் குறைந்த கட்டணமாகும். ஜோகிந்தர்நகருக்கு பேருந்தில் பயணம் செய்ய சுமார் ரூ.392 வரை செலவாகும் நிலையில், டாய் ரயிலில் வெறும் ரூ.40 கட்டணத்தில் பயணிக்க முடியும். இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தினசரி பயணிகள் அதிகளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் இயக்கம் தொடங்கிய முதல் நாளிலேயே பதான்கோட் சிட்டி நெரோ கேஜ் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன. காலை 5 மணிக்கும், 7 மணிக்கும் தலா ஒரு ரயில் புறப்பட்ட நிலையில், காங்ரா ரயில் நிலையத்திலிருந்தும் காலை 8.30 மணிக்கு சேவை தொடங்கப்பட்டது.
1929 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் பாதை, பல்வேறு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களை இணைக்கிறது. ஜ்வாலாமுகி, பைஜ்நாத் போன்ற கோயில் நகரங்கள், பாலம்பூர் போன்ற சுற்றுலா மையங்கள், பியாஸ் ஆற்றின் பொங் அணை, விரிந்த தேயிலைத் தோட்டங்கள், அழகிய கிராமங்கள் மற்றும் தௌலாதார் மலைத்தொடரின் பிரமாண்ட காட்சிகள் ஆகியவற்றை இந்த பயணத்தின் போது காண முடியும்.
இமாச்சலப் பிரதேசத்தில் கல்கா–சிம்லா டாய் ரயில் மிகவும் பிரபலமானதாக இருந்தாலும், காங்ரா பள்ளத்தாக்கு ரயில்வே இயற்கையை நெருக்கமாக ரசிக்க விரும்புவோருக்கு அமைதியான மாற்று அனுபவத்தை வழங்குகிறது. 900-க்கும் மேற்பட்ட பாலங்களை கடந்து செல்லும் இந்த ரயில் பாதையில் சுரங்கங்கள் குறைவாக இருப்பதால், பயணிகள் தொடர்ந்து மலைகள், பசுமை நிலங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளின் காட்சிகளை ரசிக்க முடிகிறது.




