நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான இயற்கைப் பேரிடரைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் 1,000 பேரால் அதிகரித்து, தற்போது 6,150 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான கள ஆய்வுகளின் பின்னர் கூடுதலாக 1,000 பேரின் பெயர்கள் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த இயற்கைப் பேரிடர், நேபாளத்தின் எட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு காரணமாக ஆறுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த பல நாட்களாக மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த பேரிடரில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின் பின்னர் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக திருத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேபாள எல்லையை ஒட்டியுள்ள திபெத் பகுதியிலும் பனிச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திபெத் பகுதியில் மட்டும் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், 519 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினரும் பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி, சேற்றில் புதையுண்டவர்களின் உடல்களையும் காணாமல் போனவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



