தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும் அதிகமாகுமா..?

 

இன்றைய வாழ்க்கை நடைமுறை சூழலில் ஐம்பது வயதை கடக்கும் ஆண்களும், பெண்களும் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தாலும்… அவர்களும் நாளடைவில் குருதி அழுத்த பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் தனிமையும் ஒர் காரணம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

பொதுவாக எம்முடைய இல்லத்தரசிகள்- குடும்பத் தலைவிகள்- வாரிசுகள் மீது நம்பிக்கை வைத்து ,அவர்களுடன் உரையாடுவார்கள். அவர்களை வளர்த்தெடுப்பார்கள். கணவன்மாரிடமும் பேசுவார்கள். ஆனால் குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆகி.. புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு அல்லது ஆண் பிள்ளை உயர்கல்வி கற்று வருவாய் ஈட்டுவதற்காக புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருந்தாலும்… அந்த வீட்டில் உள்ள மூத்த குடும்ப உறுப்பினர்கள் தனிமையை எதிர்கொள்ள தொடங்குவார்கள். தொடக்கத்தில் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டும் இவர்கள்… நாளடைவில் தனிமையின் காரணமாக உடல் சோர்வையும், மனச்சோர்வையும் எதிர்கொள்கிறார்கள்.

தனிமையில் நீண்ட நேரம் இருப்பதால்… எம்முடைய உடல் இயக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு, அவை வளர்ச்சிதை மாற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தனிமையில் இருக்கும் போது சோக உணர்வு தூண்டப்பட்டு, எம்முடைய மூளையில் கார்ட்டிசோல் எனும் ஹோர்மோன் சுரக்கத் தொடங்குகிறது. இவை ரத்த நாளங்களை சுருங்க செய்வதுடன்..குருதி ஓட்டத்திலும் பக்க விளைவை உண்டாக்குகிறது. இதன் காரணமாக குருதி அழுத்த பாதிப்பும், உயர் குருதி அழுத்த பாதிப்பும் ஏற்படுகிறது.

இதனால் குருதி அழுத்த பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெறும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள்.. மருந்தியல் சிகிச்சையை பெறுவதுடன் உளவியல் மேலாண்மைக்கான ஆலோசனைகளையும் , திட்டமிடுதலையும் தொடங்க வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.