ஹொரணை, அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் தொடர்பாக, குறித்த இல்லத்தின் பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, இந்தத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக அதிகரித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இல்லத்தின் பணிப்பாளரை இன்று (04) வியாழக்கிழமை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இல்லத்தின் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டதா அல்லது அலட்சியப்போக்கு இருந்ததா என்ற கோணத்தில் இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கை முடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் முதியவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இல்லத்தில் தங்கியிருந்தவர்களில் மேலும் மூன்று பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலை நீடிப்பதுடன், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீக்காயங்களுக்குள்ளான 07 பேர் தொடர்ந்து ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்படும் போது குறித்த இல்ல வளாகத்திற்குள் ஊழியர்கள் உட்பட மொத்தம் 72 பேர் இருந்துள்ளனர்.



