சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரில், தனது ஆடம்பர ஃபெராரி காரை சேதப்படுத்திய சிறுவர்களின் பெற்றோருக்கு எதிராக கார் உரிமையாளர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபரான காரின் உரிமையாளர் தனது பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, சுமார் 5.04 கோடி ரூபாய்மதிப்புள்ள அவரது சிகப்பு நிற ‘ஃபெராரி 488 ஜிடிபி’ கார் சேதமடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள், காரின் கண்ணாடியை சறுக்கு பலகை போல பயன்படுத்தியும், மூங்கில் கம்புகளாலும் விளையாடி காரை சேதப்படுத்தியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனால் காரின் ஹுட், கூரை மற்றும் பம்பர் ஆகியவற்றில் கடுமையான கீறல்களும் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. இந்த சேதத்தை சரிசெய்யச் சுமார் 95 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் முன்னிலையில் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், சிறுவர்களின் பெற்றோர் வெறும் 4.75 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக தர முன்வந்தனர்; மேலும் சிறுவர்களும் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த உரிமையாளர், பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவந்து, முழு பழுதுபார்ப்பு செலவையும் வசூலிக்க நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.



