.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் வதியும் தமிழரான சிதம்பரம் என்பவர் ஐந்து மில்லியன் டொலர் சுமார் இலங்கை ரூபாவில் 100 கோடி இலஞ்சமாக கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
இந்த 100 கோடி ரூபா மோசடி தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது FCID – நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் சாட்சியங்கள் பெறப்பட்ட நிலையில் இது கிடப்பில் போடப்பட்ட வழக்காகும்.
குறித்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழலுக்கு எதிரான பிரஜைகள் முன்னணியின் தலைவர் ஜாமுனி காமந்த துசார இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்,
காலிமுகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகக் காணியை ஷங்க்ரி-லா (Shangri-La) ஹோட்டலுக்கு விற்பனை செய்ததில் 5 மில்லியன் அமெரிக்கன் டொலர் (சுமார் 100 கோடி ரூபாய்) இலஞ்சமாக பெறப்பட்டுள்ளது.
இந்த பணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் டி.பி.எல் இன்வெஸ்ட்மென்ட் (TPL Investment) நிறுவனத்தின் பங்குதாரரான சிதம்பரம் என்பவர் சத்தியக் கடதாசி மூலம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கடந்த காலங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்சஜின் டி வாஸ் குணவர்தனவும் தெரிவித்திருந்தார்.
ஷங்க்ரி-லா ஹோட்டலுடன் தொடர்புடைய ‘ஹெலியாட்’ (Heliart) என்ற ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கும் டி.பி.எல் நிறுவனத்திற்கும் இடையில் 5 மில்லியன் டொலர் பெறுமதியான போலி ஆலோசனை சேவை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
100 கோடி எவ்வாறு பிரிக்கப்பட்டது
இதனூடாக குறித்த பணம் , ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியின் (Standard Chartered Bank) கணக்குகள் ஊடாகவும் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்பணத்தைக் கொண்டு தங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று (Tangalle Bay Hotel) கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், சி.எஸ்.என் (CSN) ஊடக நிறுவனத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
‘எமரால்டு டினாஸ்’ (Emerald Dinas) மற்றும் ‘கார்ல்ட்ன் ஸ்போர்ட் நெட்வொர்க்’ ஆகிய நிறுவனங்கள் ஊடாக நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரே இதன் உண்மையான பயனாளிகள் என சிதம்பரம் சத்தியக்கடதாசி மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த சத்தியக்கடதாசி 2015 அக்டோபர் 28 அன்று எஃப்.சி.ஐ.டியின் அன்றைய பிரதானி ரவி வைத்தியலங்கார மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் குணவர்தன ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அன்றைய நல்லாட்சி’ அரசாங்கக் காலத்தில் இந்த விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளது. பின்னர், எஃப்.சி.ஐ.டி பிரதானி ரவி வைத்தியலங்கார ஓய்வு பெற்றதும், இந்த ஊழலுடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனமான ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த பழைய சம்பவம் மற்றும் அதற்குரிய குரல் பதிவுகள், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சஜின் டி வாஸ் குணவர்தனவை அழைத்து உடனடியாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு கோரியே, இலஞ்ச – ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்வதற்கு இலஞ்ச ஊழலுக்கு எதிரான பிரஜைகள் முன்னணி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.



