சாலையில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் ,தீப்பிடித்த சிதைவுகளிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள்

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லாரேடோ (Laredo) நெடுஞ்சாலையில், நேற்று இரவு ஆறு பேருடன் சென்ற வணிக ஜெட் விமானம் எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் விமானம் தரையில் மோதியவுடன் தீப்பிடித்து எரிந்ததால், அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறி அடித்துக்கொண்டு வெளியேறிய காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்தன. இந்த துயர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து கிட்டத்தட்ட பாதியாகப் பிளவுபட்ட நிலையில், அதன் உடைந்த பாகங்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. விமானம் தரையில் விழுந்த சில நிமிடங்களிலேயே தீப்பற்றி எரியத் தொடங்கியதால், உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்டெடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அங்கிருந்த பயணிகள் தங்களுக்குள் உதவியபடி, சுத்தியல் மற்றும் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி விமானத்தின் கண்ணாடியை உடைத்து வெளியே வர முயற்சித்தனர். இந்த ஆபத்தான சூழலில், சாலையில் சென்ற பொதுமக்களும் அச்சத்தைப் பொருட்படுத்தாமல் ஓடிவந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விமானம் ஏன் விழுந்தது என்பது குறித்து இதுவரை தெளிவான காரணம் வெளியாகவில்லை என்றாலும், இயந்திரக் கோளாறே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில், அந்த விமானம் லாரேடோ சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் விமான விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கலிபோர்னியாவில் ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளானதும், அதைத் தொடர்ந்து மிசூரியில் ஒரு ஸ்கைடைவிங் விமானம் விபத்துக்குள்ளானதும் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. தற்போதைய லாரேடோ விபத்தும் அந்த வரிசையில் மூன்றாவது பெரும் விமான விபத்தாகப் பதிவாகியுள்ளது. விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.