.
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் இரண்டு விதமான காட்சிகளையும் கருத்துக்களையும் சமூக ஊடக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது.
முதலாவது காட்சி, கொல்லப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மீது அனுதாப அலையை உற்பத்தி செய்யும்,ஊக்குவிக்கும் காணொளிகளும் கருத்துக்களும்.இரண்டாவது,கொல்லப்பட்ட கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளின் மீது கவனத்தைக் குவிக்கும் காணொளிகளும் கருத்துக்களும்.
இதில் முதலாம் வகைப்பட்டவைதான் சமூக ஊடக வலைத்தளங்களில் பெருமளவுக்கு காணப்படுகின்றன.அவற்றை யார் பகிர்கிறார்கள்,யார் அவற்றின் மீது பதில் வினையாற்றுகிறார்கள் என்று தொகுத்துப் பார்த்தால், அந்த “நரேற்றிவ்வை” யாரோ திட்டமிட்டு “செட்” பண்ணுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.ஏனென்றால் கொல்லப்பட்ட சிறைக் காவலர்கள் மீது நாட்டின் அனுதாபத்தைக் குவியச் செய்யும் காணொளிகளும் கருத்துக்களும்தான் ஒப்பீட்டளவில் அதிகம்.
அவர்களுடைய சா வீடுகள்; அவர்களுடைய உடல்களைச் சூழ்ந்து நின்று அழும் உறவினர்கள்;அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் கருத்துக்கள்;அந்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளும் அரசியல் பிரமுகர்கள்;குறிப்பாக நீதி அமைச்சர்;அவரிடம் உறவினர்களும் தெரிவித்த கருத்துக்கள்..என்று எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது சிறைக் காவலர்களுக்கு சிறைக்குள் பாதுகாப்பில்லை,சிறைக் காவலர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,அவர்கள் குருரமான விதங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்;அவர்களைக் கொன்ற கைதிகள் கேடு கெட்டவர்கள்ஸ என்ற ஒரு நரேட்டிவ் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதா? அல்லது அதுதான் வழமையான சமூக ஊடக வலைத்தளப் பண்பா ?
இதில் மேற்சொன்ன இரண்டாம் வகைக் காட்சிகள் மிகக் குறைந்தவை.சில மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்,மனித உரிமை அமைப்புக்கள், “மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்” போன்றவை பகிரும் செய்திகள்,அறிக்கைகளில் மட்டும்தான் இந்த இரண்டாவது வகை விடயம் குவி மையப்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்போக்கு முதலாவதுதான்.
இங்கே ஓர் அடிப்படையான கோட்பாட்டு ரீதியான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.சிறைச்சாலை எனப்படுவது கைதிகளுக்குத்தான்.சிறை அதிகாரிகளுக்கு அல்ல. குற்றம் புரிந்தவர்களுக்கு புனர் வாழ்வு அளிப்பதுதான் சிறைச்சாலையின் நோக்கம்.
மேற்கத்திய ஜனநாயகத்தின் சிறைச்சாலைகள் பல்வேறு வகைகளிலும் “அப்டேட்” செய்யப்பட்டு விட்டன. ஐரோப்பாவில் சில நாடுகளில் சிறைச்சாலைக்குள் ஒருவர் அங்குள்ள புத்தகங்களில் எத்தனை பக்கங்கள் வாசித்திருக்கிறார் என்பதைக் கணித்து அதற்கு ஏற்ப சிறையிருக்க வேண்டிய நாட்கள் குறைக்கப்படுகின்றன.ஆனால் இலங்கைத் தீவில் சிறைச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது?
இலங்கைச் சிறைச்சாலைகள் போதிய பௌதீக வளங்கள் இன்றி நிரம்பி வழிகின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.2022 ஆம் ஆண்டுக்குரிய புள்ளி விபரங்களின்படி,சிறைச்சாலைகளில் தங்க வைக்கப்படக்கூடிய கைதிகளின் தொகையை விட 111 விகிதம் அதிக அளவு கைதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவே ஒரு மோசமான மேலதிக தண்டனை.அளவுக்கு மிஞ்சி அதிகமான கைதிகள் தங்க வைக்கப்படுவதனாலேயே நோய்கள் பரவுகின்றன.இறப்பு வீதம் அதிகரிக்கின்றது.கைதிகளின் உளவியல் சூழலும் பாதிக்கப்படுகிறது.2024 ஜனவரி மாதத்தில் தொடங்கி 2025 மே மாதம் வரையிலுமான காலப்பகுதிக்குள் 173 சிறைச்சாலை சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன.நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்கள்,தற்கொலைகள், சித்திரவதைகளில் விளைவாக என்று சந்தேகிக்கப்படும் மரணங்கள் போன்றவை அதற்குள் அடங்கும்.அதேசமயம் சிறைச்சாலைகளில் போதிய அளவுக்கு சிறைக் காவலர்களும் ஊழியர்களும் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சிறைச்சாலைகளின் மனிதாபிமான சூழல் மேம்படுத்தப்படவில்லை என்பதைத்தான் நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் பின்னரான தகவல்கள் காட்டுகின்றன.அங்கிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டவர்கள்,சித்திரவதை செய்யப்பட்டதாக,பழிவாங்கப்பட்டதாக, சிலர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகின்றன.
சிறைச்சாலை என்பது கைதிகளை பாதுகாப்பதற்கான அரசின் உத்தியோகபூர்வ கட்டமைப்பு.அங்கு இருக்கும் எல்லா ஏற்பாடுகளும் கைதிகளை பாதுகாப்பதற்குரியவைதான். கைதிகளை பாதுகாப்பது என்பது அவர்கள் தப்பிச் செல்லாமல் தடுப்பது அல்ல. நோய் நொடிகளில் இருந்து அவர்களை பாதுகாப்பது மட்டுமல்ல. அவர்களுடைய உடல் நலன்,உளவியல் நலன் உள்ளிட்ட அவர்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பாதுகாப்பதுதான்.ஆனால் இலங்கை தீவின் சிறைச்சாலைகள் அவ்வாறு கைதிகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் இடங்களாக உள்ளனவா?
இது ஜூலை மாதம். 1983 ஜூலை மாதத்தை நினைவு கூரும் ஒரு காலம். 83 ஜூலை வெலிகடைச் சிறைச்சாலையில் 53 தமிழ்க் கைதிகள் குரூரமாகக் கொல்லப்பட்டார்கள். சிறைச்சாலைகூட தமிழ்க் கைதிகளுக்குப் பாதுகாப்பான இடம் அல்ல என்பதனை அது நிரூபித்தது.அந்தப் படுகொலையில் குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டன.அதற்குக் காரணம்,தனது கண்களை யாருக்காவது தானம் செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தமைதான்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒரு தமிழ்க் கைதியின் கண்கள் உலகத்தைப் பார்க்கக் கூடாது, அப்படிப்பட்ட ஆசைகள் தமிழ்க் கைதிகளுக்கு இருக்கக்கூடாது என்ற காரணத்தினால் குட்டிமணியின் கண்கள் பிடுங்கப்பட்டன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகளுக்கு சிறைச்சாலைகள் எவ்வளவு தூரம் பாதுகாப்பற்றவை என்பதனை உலகம் முழுவதும் காட்டிய ஒரு சம்பவம் அது.யுத்த காலங்களில் தமிழ்க் கைதிகளுக்கு பாதுகாப்பற்றதாக இருந்த சிறைச்சாலை இப்பொழுது சிங்கள கைதிகளுக்கும் ஏன் சிங்களச் சிறைக் காவலர்களுக்கும் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. ஒரு ஜூலை மாதத்தில் இது இடம்பெற்றதனால் அதனை “கர்மா” என்று ஒரு பகுதி தமிழர்கள் கூறிக்கொள்கிறார்கள்.1983இல் தமிழ்க் கைதிகள் சிங்களக் கைதிகளால் கொல்லப்படுகையில் அப்போதிருந்த சிறைக் காவலர்களும் அதற்கு உடந்தை என்று தப்பிய கைதிகள் கூறினார்கள்.
1983 ஜூலையிலிருந்து இன்றுவரையிலுமான 46 ஆண்டுகளில்,நாட்டில் 6 சிறைப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.இவற்றுள் 1983,1997,2000 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றவை இன ரீதியிலானவை. இவற்றுள் மொத்தம் 83 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.83 ஜூலை வெலிகடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் தொடங்கி அதன்பின் சிறைச்சாலைகளில் நடந்த படுகொலைகள் தொடர்பாக இதுவரை எத்தனை பேர் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?
வெலிகடைச் சிறைச்சாலை படுகொலைக்கு அப்போதிருந்த அரசாங்கமே பொறுப்பு என்று இப்போதுள்ள அமைச்சர் விமல் ரட்நாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.அந்த கொலைகளுக்காக இதுவரையிலும் யாராவது ஒரு சிங்கள அரசியல்வாதி,அல்லது அதிகாரி மன்னிப்புக் கேட்டதாக,பொறுப்புக் கூறியதாக,யாராவது எங்கேயாவது வாசித்திருக்கிறீர்களா?
83 ஜூலை வெலிகடைப் படுகொலைக்கு பின், அதே சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு 27பேர் கொல்லப்பட்டார்கள்.அதன்பின் மகர சிறைச்சாலையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் 11 பேர் கொல்லப்பட்டார்கள்.இந்தப் படுகொலைகள் தொடர்பில் இதுவரையிலும் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?
கடந்த வாரம் நடந்த படுகொலைகளின் பின்னணியில் போதைப்பொருள் குற்ற வலையமைப்பு இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. சிறைச்சாலைக்குள் அவ்வாறான குற்ற வலையமைப்பு பலமாக இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? அரசாங்கத்தின் புனர்வாழ்வு கட்டமைப்பு தோல்வி அடைந்து விட்டது என்று பொருள்.கைதிகள் தொடர்ந்தும் குற்றம் செய்யும் மனோ நிலையோடு காணப்படுகிறார்கள் என்று பொருள்.கைதிகளை சகஜ வாழ்க்கைக்குத் திருப்புவதில் சிங்கள பௌத்த பண்பாடு தோல்வி அடைந்து விட்டது என்று பொருள். இலங்கைத் தீவின் இலவச கல்விமுறை அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறிவிட்டது என்று பொருள்.
அந்தத் தோல்வியை மறைப்பதற்குத்தான் சிறைக் காவலர்கள் தியாகிகளாக மேலே உயர்த்தப்படுகிறார்களா? தனிப்பட்ட முறையில் சில சிறைக் காவலர்கள் கருணை உள்ளவர்களாக இருக்க வாய்ப்புண்டு.ஆனால் இங்கு தேவைப்படுவது கட்டமைப்பு மாற்றம். சிறையில் இருந்து விடுவிக்கப்படும் கைதிகள் வாழ்க்கை குறித்த புதிய தரிசனத்தோடும் தெளிவோடும் வெளியே வர வேண்டும்.ஆனால் அப்படி எத்தனை பேர் குற்றவாளி மனோநிலையில் இருந்து விடுபட்டு வெளியே வருகிறார்கள்?
இறந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறத் தயாராக இல்லாத ஓர் அரசியல் பாரம்பரியத்தில், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பொறுப்பு கூறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?



