அமெரிக்க -இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனி: ஈரானில் 3 நாட்களுக்கு அரசு இறுதிச் சடங்கு!

 

மேற்காசிய போர் வெடித்த முதலாம் நாளன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடலுக்கு, மூன்று நாட்களுக்கு உத்தியோகபூர்வ அரச இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு ஈரான் அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

முன்னதாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள், பிராந்தியத்தில் தீவிரமடைந்த போர்ச் சூழல் காரணமாகப் பிற்போடப்பட்டிருந்ததாக ஏஎஃப்பி செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விசேட ஏற்பாடுகள் குறித்து ஈரானின் டெஹ்ரான் நகர பிரதி மேயர் மொஹமட் அமீன் தவகோலிசாதே அந்நாட்டு அரச தொலைக்காட்சியிடம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,

நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்குப் பொது இறுதிச் சடங்கு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த இறுதிச் சடங்குகள் எப்போது நடக்கும் என்ற துல்லியமான திகதி இன்னும் அறிவிக்கப்படாத போதிலும், அது இஸ்லாமிய நாட்காட்டியின் ஆரம்ப ‘முஹர்ரம்’ மாதப் பகுதியில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் உட்பட புனித நகரங்களான கொம் மற்றும் அவர் அடக்கம் செய்யப்படவுள்ள மஷ்ஹாத் ஆகிய மூன்று பிரதான நகரங்களில் நடத்தப்படவுள்ளன. விசேடமாக தலைநகர் தெஹ்ரானில் மட்டும் அஞ்சலிச் செலுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடிக்கும்.

மறைந்த உச்ச தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 20 மில்லியன் (2 கோடி) மக்கள் வரை திரளுவார்கள் என நகர அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

மேற்காசிய போர் தீவிரமடைந்துள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலையில், ஈரானின் மிக உயரிய தலைவரின் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளானது பிராந்தியப் பாதுகாப்பில் பெரும் திருப்புமுனையாகவும், அதேவேளை சவாலான ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.