தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கோட்டைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலக இருக்கையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை துண்டை அகற்றியுள்ளார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில், வெப்பம் மற்றும் வியர்வையிலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகாரிகள் இருக்கைகளில் துண்டுகளைப் பயன்படுத்தும் வழக்கம் தொடங்கியது. இது நாளடைவில் அதிகார வர்க்கத்தின் (VIP Culture) அடையாளமாக மாறிப்போனது. இந்நிலையில், இந்த பழைய முறையைக் கைவிட்டு, ஒரு சாமானிய மனிதராகத் தனது பணிகளைத் தொடங்கியுள்ள விஜய்யின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.திரைப்பட டிக்கெட்
இந்த மாற்றத்திற்குப் பின்னணியில் 14 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் (Licypriya Kangujam) விடுத்த வேண்டுகோள் முக்கியக் காரணமாக அமைந்தது. சமூக வலைதளத்தில் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்த அவர், “அரசு அலுவலகங்களில் அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் இந்த வெள்ளை துண்டு கலாச்சாரத்தை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதனைக் கவனித்த முதலமைச்சர் விஜய், அடுத்த சில நாட்களிலேயே அதிகாரப்பூர்வக் கூட்டங்களில் துண்டு இல்லாத சாதாரண இருக்கையில் அமர்ந்து பங்கேற்றார். இது, மக்களின் குரலுக்கு அவர் மதிப்பளிக்கிறார் என்பதற்கான சான்றாகப் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செய்கையைத் தொடர்ந்து, தமிழகத்தின் மற்ற அரசுத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் இதே போன்ற மாற்றங்கள் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே கோட்-சூட் அணிந்து பதவியேற்று ‘மாடர்ன்’ முதல்வராகத் தன்னைக் காட்டிக்கொண்ட விஜய், தற்போது நிர்வாக ரீதியிலான இத்தகைய சின்னச் சின்ன மாற்றங்களின் மூலம் தனது தனித்துவத்தை நிரூபித்து வருகிறார். இது “திராவிட அரசியல்” பாணியிலிருந்து விலகி, ஒரு புதிய கார்பரேட் மற்றும் திறந்தநிலை நிர்வாகத்தை நோக்கித் தமிழகம் நகர்வதைக் குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.




